தமிழக அரசு விவசாயம் மட்டுமின்றி அதன் சார்பு தொழில் முன்னேற்றத்துக்கும் அனைத்து உதவிகளையும் செய்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சேலம் மாவட்டம் வீரபாண்டியில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் முதலவர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இதை தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஏற்கனவே வாங்கப்பட்ட மனுக்கள்மீது தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.


மேலும், பொதுமக்கள் கொடுத்துள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல் என்ன காரணத்திற்காக இந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என்பதையும் பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக பதில் கடிதம் அனுப்பப்படும். இந்த மனுக்கள் பெரும்பாலும் முதியோர் உதவித்தொகை பெறுவதற்குதான் அதிகமான மனுக்கள் கொடுக்கிறார்கள். அதுபோல் நீண்ட நாட்களாக வசித்து வரும் இடத்திற்கு பட்டா வாங்காமல் இருப்பார்கள். அப்படி பட்டா வாங்காமல் இருப்பவர்கள் தாங்கள் வசிக்கின்ற பகுதிக்கு பட்டா வேண்டும் என விண்ணப்பித்தால், அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து தகுதி இருந்தால் அவர்களுக்கு பட்டா வழங்குவார்கள்.


பல பேர் நிலத்தை வாங்குவார்கள், வீடுகள் வாங்குவார்கள். ஆனால் பட்டா மாறுதல் செய்யாமல் இருப்பார்கள். அவர்கள் மனு கொடுத்தால் அந்த மனுவை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பட்டா மாறுதல் செய்து கொடுக்க அரசு ஏற்பாடுகள் செய்யும். அதே போல் இன்னும் பல்வேறு பிரச்சனைகளான தங்கள் பகுதிகளில் இருக்கின்ற குறைபாடுகள் எல்லாவற்றையும் மனு மூலமாக சுட்டிக்காட்டுகின்ற போது அதை அரசு ஆய்வு செய்து அதற்கு உண்டான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 


நீண்டகாலமாக தீர்க்கமுடியாத பிரச்சினைகள் தீர்க்கவே இந்த சிறப்பு முகாம் நடத்தப்படுவதாகக் கூறிய அவர், சரியான மனுக்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்களுக்கு அதற்கான காரணங்களும் தெரிவிக்கப்படும் என்றும் கூறினார். நீர்மேலாண்மை திட்டங்களுக்கு அதிமுக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருவதாகக் கூறிய முதலமைச்சர், மேட்டூரில் இருந்து கொள்ளிடம் வரை எங்கெங்கு தடுப்பணை கட்டலாம் என ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என்றும், முதல் கட்டமாக கரூரில் தடுப்பணை கட்டப்படும் என்றும் கூறினார்.