கூட்டுறவு சங்கம் மற்றும் வங்கிப் பணியாளர்களுக்கான ஊதியத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உயர்த்தி அறிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கூட்டுறவு கடன் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தக் காலம் முடிவுற்றதால், ஊதிய விகிதத்தை திருத்தியமைக்க கூட்டுறவுத் துறை அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்க ஆணையிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், மத்திய கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவு வங்கிகள், தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் பணியாற்றுபவர்களுக்கு 20 விழுக்காடு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.


பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்க பணியாளர்களுக்கு 2.57 மடங்கு ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. நகரக்கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கு 2.70 மடங்கும், தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி பணியாளர்களுக்கு 15 விழுக்காடும், தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு 21 விழுக்காடும் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.


இதன்மூலம் 22 ஆயிரத்து 48 பேர் பயன் அடைவர் என்றும் அரசுக்கு ஆண்டுக்கு 143 கோடியே 72 லட்சம் ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.