மருத்துவ படிப்பில் சேர்வதற்காக தேசிய அளவில் நீட் என்ற பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதன் முதலாக கடந்த ஆண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் நீட் தேர்வு முறை அமல்படுத்தப்பட்டது. தற்போது இந்த தேர்வை வருகிற மே மாதம் 6-ம் தேதி மத்திய கல்வி வாரியம் CBSE நடத்த உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கான தேர்வு மையம் ஒதுக்கீட்டில், தமிழக மாணவர்களுக்கு வேறு மாநிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. 


எனவே இதனை எதிர்த்து சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த காளிமுத்து மைலவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே நீட் தேர்வு மையம் ஒதுக்கக்கோரி மனு அளித்திருந்தார். 


இது குறித்த வழக்கு விசாரணையில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு தமிழகத்திலேயே நீட் தேர்விற்கான மையங்களை ஒதுக்கி சென்னை உயர்நீதிமன்றம் ஏப்ரல் 7-ம் தேதி உத்தரவிட்டிருந்தது.  


இதையடுத்து, தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எழுத வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டும் என்ற சிபிஎஸ்இ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு தாக்கல் செய்தது.


இந்நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்துள்ளது.