சிரியாவில் 2012 முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இருப்பினும், இரண்டு மாதங்களாக கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்கள் வசிக்கும் இடங்களின் மீது சிரியா மிகக் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில், அப்பாவி பொது மக்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைப் பார்த்து உலகமே கலங்கியது. இதைத் தொடர்ந்து உலக நாடுகள் கொடுத்த அழுத்தம் காரணமாகத் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனால், மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். 


இந்நிலையில், சிரியாவில் அதிபர் அல் ஆசாத் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். 


இதில், சிரியாவின் கிழக்கு கவுடா பகுதியில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி நகரமான டூமா நகரில், நடத்தப்பட்ட ரசாயன தாக்குதலில் பொது மக்கள் 70 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கு நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள், மீட்பு படையினர் கூறியுள்ளனர். 


ஹெலிகாப்டர் ஒன்றின் வழியே சரீன் என்ற நச்சு ரசாயன பொருள் அடங்கிய வெடிகுண்டு வீசப்பட்டிருக்க கூடும் என அமெரிக்க தொண்டு அமைப்பு ஒன்று குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. எனினும் பலி எண்ணிக்கை 180ஐ தொட்டிருக்கும் என்றும், ஆனால் இரவு நேரம் மற்றும் தொடர் குண்டு வீச்சு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய முடியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தென் அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். லிமாவில் நடைபெறும் அமெரிக்கர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்கவும், அதன்பின்னர் கொலம்பியா செல்லவும் முடிவு செய்திருந்தார். ஆனால், டிரம்ப் தனது பயணத்தை திடீரென ரத்து செய்துவிட்டார். 


இது கூறித்து நேற்று வெள்ளை மாளிகையில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, சிரியாவில் நடைபெற்ற ரசாயன ஆயுத தாக்குதலுக்கு அமெரிக்காவின் பதிலடி நடவடிக்கையை மேற்பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொள்ளும் பணி இருப்பதால் டிரம்ப் தென் அமெரிக்கா செல்லவில்லை. அவக்கு பதிலாக லிமா மற்றும் கொலம்பியாவுக்கு துணை அதிபர் மைக் பென்ஸ் செல்வார். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. 


மேலும், சிரியாவில் நடந்து உள்ள ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ராணுவ தலைவர்களுடனும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் குழுவினருடனும் நேற்று முன்தினம் முக்கிய ஆலோசனை நடத்தினார்.


அப்போது அவர் கூறும்போது, “சிரியா ரசாயன ஆயுத தாக்குதலில் பதிலடி தருவது பற்றி விரைவில் முடிவு எடுக்கப்படும். ராணுவ ரீதியில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது தொடர்பாக பல்வேறு யோசனைகள் உள்ளன. நாம் எல்லோரும் பார்த்த இந்த வன்கொடுமைகள் இனியும் தொடர்வதை அனுமதிக்க முடியாது” என்று குறிப்பிட்டார்.