கிரிக்கெட் வீரர்களும், மற்ற துறைசார் வல்லுனர்களும் நாட்டிற்கு தலைமை தாங்க முடியாது, அனுபவமிக்க அரசியல்வாதி ஒருவரே ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் கொழும்பு நிகச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய முரளிதரண் இந்த கருத்தை பதிவு செய்துள்ளார். முரளிதரணின் இந்த கருத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளன.


நிகழ்ச்சியில் முரளி பேசுகையில்., இலங்கையில் சிலர் தொழிலதிபர்கள் மீதும் மற்ற துறை சார் வல்லுனர்கள் மீதும் நம்பிக்கை வைக்கின்றனர். ஆனால் மக்களின் பிரச்சினைகளை அரசியல் அனுபவம் உள்ள ஒருவராலேயே தீர்க்க முடியும்.


சமாதான பேச்சுவார்த்தைகளின் போது விடுதலைப் புலிகளுக்கு வாய்ப்பு கிடைத்தது. எனினும் அத்தரணத்தில் அவர்கள்அப்பாவிகளை கொலை செய்தனர் எனவும் முத்தையா முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.


2009-ல் யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாளாக தான் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


1977-ல் ஆட்சி மாற்றத்தின் பின்னர் தங்கள் வீடுகள் அழிக்கப்பட்டதாகவும், தனது தந்தை தாக்கப்பட்டார் எனவும் குறிப்பிட்ட அவர், அத்தருணத்தில் அனைவரும் இந்தியாவிற்கு சென்றனர் ஆனால் தங்களது குடும்பம் இந்தியாவிற்கு செல்லவில்லை எனவும் குறிப்பிட்டு பேசினார். காரணம் தாங்கள் இலங்கையிலேயே வாழ விரும்பியதாகவும் குறிப்பிட்டார்.


இரு தரப்பும் தவறிழைத்தன, ஒரு கட்டத்தில் அரசாங்கம் தவறிழைத்தது பின்னர் விடுதலைப்புலிகள் தவறிழைத்தனர். ஆனால் அவர்கள் வாய்ப்புகளை தவறவிட்டனர், தமிழர்கள் அச்சத்துடனேயே வாழ்ந்தனர். மக்களுற்கு யார் பாதுகாப்பு வழங்குவார் என்பதே இந்த தேர்தலில் முக்கியம், அவ்வாறான தலைவருக்கே நான் வாக்களிப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டு பேசினார்.


இந்நிலையில் முத்தையா முரளிதரனின் விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பான கருத்துக்கு உலகம் முழுவதும் பரந்துவாழும் தமிழர்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.