ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார வர்த்தக மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேச்சுவார்த்தை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டாவோஸ்: சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார கூட்டமைப்பின் மாநாடு 2020 நடைபெறுகிறது. இதில் பங்குபெற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மாநாட்டின் இடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து பேசினார். அப்போது இருதலைவர்களும் காஷ்மீர் விவகாரம் பற்றி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீர் இரு நாடுகளும் பரஸ்பரம் தீர்க்க வேண்டிய பிரச்சினை என அதிபர் டிரம்ப் கடந்த செப்டம்பர் மாதத்தில் தெரிவித்தார். மீண்டும் நேற்று டாவோசில் பாகிஸ்தான் பிரதமர் இமரான் கானை சந்தித்த போது, காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீட்டிற்கு இடமில்லை என்ற இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது.


எனவே பாகிஸ்தானுக்கு காஷ்மீர் விவகாரத்தில் உதவ முடிந்தால் நிச்சயம் செய்வதாக டிரம்ப் தெரிவித்தார்.காஷ்மீர் பிரச்சினையை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் டிரம்ப் இம்ரான் கானிடம் தெரிவித்துள்ளார்.



மேலும், ‘காஷ்மீரைப் பற்றியும், பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே என்ன நடக்கிறது என்பது பற்றியும் இருவரும் பேசினோம். எங்களால் உதவ முடிந்தால், நாங்கள் நிச்சயமாக உதவுவோம். இரு நாடுகளுடையிலான பிரச்சினையை அமெரிக்கா தீவிரமாக கண்காணித்து வருகிறது’ என்று டிரம்ப் தெரிவித்தார்.


‘இந்தியாவுடனான பிரச்சினை பெரிய பிரச்சினை. வேறு எந்த நாட்டினாலும் முடியாது என்பதால், இந்த பிரச்சினையை தீர்ப்பதில் அமெரிக்கா தனது பங்கை வகிக்கும் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம்’ என இம்ரான் கான் கூறினார். காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாவது நாடு மத்தியஸ்தம் செய்வதற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் இந்த விவகாரத்தில் தலையிட ஆர்வம் காட்டுகிறார்.