டோக்கியோ :- ஜப்பானின் முதல் இளம் வயது பிரதமர் மற்றும் நீண்ட காலம் பிரதமர் பதவியில் இருந்தவர் என்கிற பெருமைகளுக்கு சொந்தக்காரர் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே. இவர் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.  இதனை தொடர்ந்து ஷின்ஜோ அபேயின் அரசில் அமைச்சரவை தலைமை செயலாளராக இருந்து வந்த யோஷிஹைட் சுகா ஜப்பானின் புதிய பிரதமராக பதவியேற்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யோஷிஹைட் சுகா, ஷின்ஜோ அபேவை போல அரசியல் குடும்பத்தின் வாரிசாக இல்லாமல், ஒரு சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் பொது மக்களிடமிருந்து வந்த தலைவராக அனைவராலும் பார்க்கப்பட்டார்.  இதனால் அவர் தனது பதவி காலத்தின் ஆரம்பத்திலேயே மக்களின் ஆதரவை அதிக அளவில் பெற்றார்.மேலும் அவர் பிரதமர் பதவிக்கு வந்ததும் நாட்டில் டிஜிட்டல் மாற்றம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் உட்பட தொடர்ச்சியான நடைமுறை நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தினார்.  இதனால் அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்து வந்தது. சுமார் 70 சதவீத ஜப்பானியர்கள் யோஷிஹைட் சுகாவை ஒரு சிறந்த பிரதமராக ஏற்று அவருக்கு தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.‌  எனினும், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுப்பதில் மிகவும் மந்தமாக செயல்பட்டதாக பிரதமர் யோஷிஹைட் சுகா மீது தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்தன.


அதுமட்டுமல்லாது கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் சுகாதார நிபுணர்களின் எச்சரிக்கையை மீறி ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியதால் பிரதமர் யோஷிஹைட் சுகா மீது மக்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டது.  மேற்கண்ட இந்தக் காரணங்களால் குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு பெரிதும் சரிந்தது. சமீபத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் பிரதமர் யோஷிஹைட் சுகாவுக்கு மக்கள் மத்தியில் இருந்த ஆதரவு 70 சதவீதத்திலிருந்து 26 சதவீதமாக குறைந்து விட்டதாக தெரிவித்தன.  இந்நிலையில் வருகிற 29-ம் தேதி நடைபெற உள்ள ஜப்பானின் ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சியின் புதிய தலைவரை‌ தேர்வு செய்வதற்கான தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என பிரதமர் யோஷிஹைட் சுகா அறிவித்துள்ளார். இதன் மூலம் அவர் இந்த மாத இறுதியில் பிரதமர் பதவியிலிருந்து விலக முடிவு செய்திருப்பதாகவும் கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


தலைநகர் டோக்கியோவில் ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து பேசிய யோஷிஹைட் சுகா கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.  ஜப்பானை பொறுத்தவரையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வகிக்கும் அரசியல் கட்சியின் தலைவர் யாரோ அவரே அரசின் தலைவராகவும் அதாவது பிரதமராகவும் தேர்வு செய்யப்படுவார்.‌  அந்த வகையில் பிரதமர் யோஷிஹைட் சுகா கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளதால், அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வார் என தெரிகிறது.


அதன்படி ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படும் நபர் ஜப்பானின் புதிய பிரதமராக பதவி ஏற்பார்.ஜப்பானின் தடுப்பூசி திட்ட தலைவர் டாரோ கோனா மற்றும் மத்திய உள்துறை மந்திரி சானே தகைச்சி ஆகிய இருவரும் களத்தில் உள்ள முக்கிய வேட்பாளர்களாக அறியப்படுவதாகவும் இவர்களில் ஒருவர் பிரதமராக தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் ஜப்பான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


ALSO READ சொத்து தேவையில்லை! காதலன் தான் முக்கியம்! ஜப்பான் நாட்டு இளவரசியின் அதிரடி முடிவு!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR