500 ரூபாய் நோட்டுகளை காணவில்லையா... ரிசர்வ் வங்கியின் ரியாக்சன் என்ன?

500 Rupees Notes Missing Issue: சுமார் 88 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ரூ. 500 நோட்டுகள் காணவில்லை என அறிக்கை ஒன்று வெளியான நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி தரப்பில் இருந்து அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Jun 18, 2023, 02:27 PM IST
  • 8,810.65 மில்லியன் பணத்தாள்கள் மொத்தம் அச்சிடப்பட்டுள்ளன.
  • ஆனால், 7260 மில்லியன் பணத்தாள்களை மட்டுமே ரிசர்வ் வங்கி பெற்றுள்ளது.
  • நாங்கள் வெளியிடும் தகவல்களை நம்பும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் - ஆர்பிஐ
500 ரூபாய் நோட்டுகளை காணவில்லையா... ரிசர்வ் வங்கியின் ரியாக்சன் என்ன? title=

500 Rupees Notes Missing Issue: இந்திய பணதாள்களை அச்சடிக்கும் அச்சகங்களில் அச்சடிக்கப்பட்ட சுமார் 88 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ரூ. 500 நோட்டுகள் காணவில்லை என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அறிக்கை ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டது. 

இந்த அறிக்கையை சமூக ஆர்வலர் மனோரஞ்சன் ராய் அவரது இணையத்தளத்தில் வெளியிட்டிருந்த நிலையில், இதுகுறித்து விசாரிக்கக் கோரி மத்திய பொருளாதார புலனாய்வுப் பிரிவு மற்றும் அமலாக்கத்துறைக்கு அவர் கடிதம் எழுதியிருந்தார். மேலும், இவ்வளவு பெரிய மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் காணாமல் போனது தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் அவர் அச்சம் தெரிவித்திருந்தார்.

தவறான விளக்கம்

இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 500 ரூபாய் நோட்டுகள் காணாமல் போனது என்ற அறிக்கையை நேற்று நிராகரித்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் இயந்திரங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் "தவறான விளக்கத்தின்" அடிப்படையில் இருப்பதாக ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. அச்சகங்களில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்படும் அனைத்து ரூபாய் நோட்டுகளும் முறையாகக் கணக்கில் வைக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | காணாமல் போன 88 ஆயிரம் கோடி... எல்லாம் 500 ரூபாய் நோட்டுகள் - யார் பொறுப்பு?

இதுகுறித்து, ஆர்பிஐ தலைமை பொது மேலாளரான யோகேஷ் தயாள் வெளியிட்டுள்ள விளக்கத்தில், "இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பணத்தாள்கள் அச்சடிக்கும் அச்சகங்களில் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் காணாமல் போனதாக சில ஊடகங்களில் செய்திகள் பரப்பப்படுகின்றன. இந்த செய்திகள் சரியானவை அல்ல என்று RBI வலியுறுத்துகிறது. இந்த செய்திகள் அச்சகங்களில் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சேகரிக்கப்பட்ட தகவல்களின் தவறான விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. 

வலுவான அமைப்புகள்

பணம் அச்சிடப்படும் அச்சகங்களில் இருந்து இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்படும் அனைத்து ரூபாய் நோட்டுகளும் சரியாகக் கணக்கில் வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அச்சகங்களில் அச்சிடப்பட்டு, ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்படும் ரூபாய் நோட்டுகளை கண்காணிக்க வலுவான அமைப்புகள் உள்ளன. அதில் ரூபாய் நோட்டுகளின் உற்பத்தி, சேமிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றைக் கண்காணிக்கும் நெறிமுறைகளும் அடங்கும். எனவே, இதுபோன்ற விஷயங்களில் அவ்வப்போது ரிசர்வ் வங்கி வெளியிடும் தகவல்களை நம்பும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என தெரிவித்துள்ளது. 

அறிக்கையில் கூறப்பட்டது என்ன?

மனோரஞ்சன் ராய் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 500 ரூபாய் நோட்டுகள் குறித்து அதில் கேள்விகளை தாக்கல் செய்தார். இது இந்தியப் பொருளாதாரத்தில் ரூ. 88,032.5 கோடி மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகள் காணாமல் போனதாகக் அறிக்கையில் கூறப்பட்டது. இந்தியாவின் மூன்று அச்சகங்களும் புதிதாக வடிவமைக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளில் மொத்தம் 8,810.65 மில்லியன் பணத்தாள்களை வெளியிட்டதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தரவுகளில் கூறுகிறது. இருப்பினும், ரிசர்வ் வங்கி 7,260 மில்லியன் பணத்தாள்களை மட்டுமே பெற்றுள்ளதாகவும் அதில் கூறப்படுகிறது.

2015-16 நிதியாண்டில்...

குறிப்பாக, நாசிக்கில் உள்ள கரன்சி நோட் பிரஸ் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் 2016ஆம் ஆண்டு டிசம்பருக்கு இடையில் 375.450 மில்லியன் புதிய 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், ரிசர்வ் வங்கியின் பதிவுகள் 345.000 மில்லியன் துண்டுகளை மட்டுமே குறிப்பிடுகின்றன. காணாமல் போன நோட்டுகளில், ஏப்ரல் 2015 முதல் மார்ச் 2016 வரை நாசிக் அச்சகத்தில் 210 மில்லியன் பணதாள்கள் அச்சிடப்பட்டதாகக் கூறப்படுகிறது, மேலும், இந்த நோட்டுகள் ரகுராம் ராஜன் கவர்னராக இருந்த காலத்தில் ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டன.

RTI கோரிக்கையை தாக்கல் செய்ததோடு, ஆர்வலர் மனோரஞ்சன் ராய் மத்திய பொருளாதார புலனாய்வு பணியகம் (CEIB) மற்றும் அமலாக்க இயக்குனரகம் (ED) ஆகியவற்றிற்கு ₹500 ரூபாய் நோட்டுகள் காணாமல் போனது தொடர்பான முரண்பாடு குறித்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், ரிசர்வ் வங்கியின் சில மூத்த அதிகாரிகள், கரன்சி நோட்டுகளை அச்சடித்தல் மற்றும் வழங்குவதில் உள்ள சிக்கலான தளவாட சவால்களை மேற்கோள் காட்டி, பொருந்தாத தன்மையை ஆதரித்துள்ளனர் என்று லைவ் மிண்ட் மேற்கோள் காட்டிய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | Indian Railways: 5 ஸ்டார் ஹோட்டலை மிஞ்சும் ரயில் நிலையம் - அட எங்க இருக்கு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News