காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தி மோடியை சமாளிப்பாரா?

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்வு. அவர் முன்னால் இருக்கும் சவால்களை சமாளிப்பார?

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 11, 2019, 09:42 AM IST
காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தி மோடியை சமாளிப்பாரா? title=

புதுடெல்லி: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி பதவி விலகிய நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 54 இடங்களில் மட்டுமே வெற்றிப் பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை மீண்டும் ஒருமுறை இழந்தது. கடந்த 2014 ஆம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலில் 44 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். 

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே தொடர வேண்டும் என கட்சியில் பெரும்பாலனோர் கூறிவந்தனர். ஆனால் தன்னுடைய ராஜினாமா முடிவில் ஸ்திரமாக ராகுல் இருப்பதால், நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூடும் என தகவல் வெளியாகியது.

இதனையடுத்து, நேற்று புதிய தலைவரைத் தேர்வு செய்ய காங்கிரஸ் காரியக் கமிட்டி டெல்லியில் கூடியது. இந்த கூட்டத்தில் சோனியாகாந்தி, பிரியங்கா, அகமது பட்டேல், ஏகே.அந்தோணி, ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். ஆனால் பங்கேற்ற சிறிது நேரத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவரும் கூட்டத்தில் இருந்து உடனடியாக கிளம்பி விட்டார்கள். 

காங்கிரஸ் கட்சியின் மூத்த மற்றும் முக்கிய தலைவர்கள் அடுத்த காங்கிரஸ் தலைவர் யாரை நியமிப்பது என்பது குறித்து விரிவாக விவாதித்தனர். பின்னர் காங்கிரஸ் காரியக் கமிட்டி இரவு 8.30 மணிக்கு மீண்டும் கூடும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல மீண்டும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சோனியா காந்தி தற்காலிக தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

Trending News