காங்கிரசின் புதிய தலைவர் யார்? இன்று இரவு 9 மணிக்கு முடிவு

காங்கிரசின் புதிய தலைவர் யார்? இன்று இரவு 9 மணிக்கு அறிவிக்க வாய்ப்பு எனத் தகவல்.

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 10, 2019, 02:09 PM IST
காங்கிரசின் புதிய தலைவர் யார்? இன்று இரவு 9 மணிக்கு முடிவு title=

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார் என்பது குறித்து மீண்டும் இன்று இரவு 8 மணிக்கு கூடும் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் இறுதி முடிவு செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

நடந்து முடிந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 54 இடங்களில் மட்டுமே வெற்றிப் பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை மீண்டும் ஒருமுறை இழந்தது. கடந்த 2014 ஆம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலில் 44 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கூட்டத்தில் ராகுல் காந்தியின் ராஜினாமாவை கட்சி மேலிடம் ஏற்க்கவில்லை.

ராகுல் காந்தி தன்னுடைய ராஜினாமா முடிவில் ஸ்திரமாக  இருப்பதால், நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூடும் என தகவல் வெளியாகியது. அதேவேலையில் மறுபுறம் பிரியங்கா காந்தி தலைமை பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

இதனையடுத்து, நேற்று சோனியா காந்தியின் இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் ராகுல், பிரியங்கா உட்பட கட்சியின் மூத்த மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். அதில் அடுத்த காங்கிரஸ் தலைவர் யாரை நியமிப்பது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது. 

இந்த பரபரப்பான சூழலில் இன்று புதிய தலைவரைத் தேர்வு செய்ய காங்கிரஸ் காரியக் கமிட்டி டெல்லியில் கூடியது. இந்த கூட்டத்தில் சோனியாகாந்தி, பிரியங்கா, அகமது பட்டேல், ஏகே.அந்தோணி, ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். ஆனால் பங்கேற்ற சிறிது நேரத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவரும் கூட்டத்தில் இருந்து உடனடியாக கிளம்பி விட்டார்கள். 

இந்தநிலையில், காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தின் முதல் கட்டம் ஆலோசனை முடிவடைந்துள்ளது, இன்று (சனிக்கிழமை) இரவு 8.30 மணிக்கு மீண்டும் கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இதுக்குறித்து பேசிய மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதீர் ரஞ்சன் சவுத்ரி, "நாங்கள் மீண்டும் இரவு 8.30 மணிக்கு சந்திப்போம், அப்பொழுது புதிய கட்சித் தலைவரின் பெயர் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" எனக் கூறினார்,.

Trending News