இருபெரும் தலைவர்களை இழந்து வாடும் இந்தியா!!

இந்த மாதத்தில் இந்தியாவில் இரண்டு மூத்த தலைவர்கள் காலமாகி உள்ளனர். இச்சம்பவம் பல தலைவர்களை துக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 17, 2018, 03:16 PM IST
இருபெரும் தலைவர்களை இழந்து வாடும் இந்தியா!! title=

இந்தியாவை ஆண்ட பிரதமர்களில் முக்கியமானவர் அடல் பிகாரி வாச்பாய். அதேபோல மாநிலங்களில் ஆட்சி புரிந்த தலைவர்களில் மு.கருணாநிதி முக்கியமானவர். இந்த இருபெரும் தலைவர்களின் சில முக்கிய அம்சங்களை பார்ப்போம்.

அடல் பிகாரி வாச்பாய்- இவரை அறியாதவர்கள் யாருக்கும் இருக்க முடியாது என்றே கூறலாம். ஏனென்றால் இவரது ஆட்சியின் போது தான் இந்தியா 1998-ம் ஆண்டு மே 11-ம் தேதி பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியது. பாகிஸ்தானுடனான கார்கில் போரில் வென்றது. இந்தியா தகவல் தொழில் நுட்பத்துறையில் சிறந்து விளங்கியது. இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்தது. அண்டை நாடான பாகிஸ்தானுடன் நல் உறவை விரும்பியது. இந்தியாவில் இருந்து பஸ் மூலம் பாகிஸ்தானின் லாகூருக்கு பயணம் செய்தது. இவர் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை கொண்டவர் தான். ஆனாலும் மதசார்பற்ற தலைவராகத்தான் விளங்கியது என போற்றக்கூடிய பல சம்பவங்களை கூறலாம். 

இவர் 1924 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் பிறந்தவர். இளம் வயதிலேயே இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றுள்ளார். 1944 ஆம் ஆண்டு குவாலியரில் உள்ள "ஆரிய சமாஜ்" என்ற சமூக தொண்டு புரியும் இயக்கத்தில் இணைத்துக் கொண்டார். பின்னர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டு படிப்படியாக அரசியலில் முன்னேறி ஒரு "பாரதிய ஜனதா கட்சி"யில் ஒரு பெரும் தலைவராக உருவானார். 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்களை வென்ற பாஜக-வை ஆட்சி அமைக்க, அப்போதைய குடியரசு தலைவர் ஷங்கர் தயால் ஷர்மா அழைத்தார். இதன் மூலம் இந்தியாவின் 10 வது பிரதமராக வாஜ்பாய் பதவியேற்றார். ஆனால் மக்களவை பிஜேபி பெரும்பான்மையை நிருப்பிக்க முடியாததால் 13 நாட்களுக்குப் பிறகு பாஜக ஆட்சியை இழந்தது. 

பின்னர் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் பாஜ கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து மீண்டும் வாஜ்பாய் பிரதமராக பதவியேற்றார். இந்த சமயத்தில் தான் "அணுகுண்டு சோதனை", "லாகூர் உச்சிமாநாடு", "கார்கில் போர்" போன்ற சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அப்பொழுது ஜெயலலிதா தேசிய ஜனநாயக கூட்டணி அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றதால், மீண்டும் ஆட்சி கலைக்கப்பட்டது.

1999 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக-வின் தலைமையிலனா தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தமுள்ள 543 இடங்களில் 303 இடங்களை வென்று ஆட்சி அமைத்தது. மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராக பதவியேற்றார் அடல் பிகாரி வாச்பாய். இரண்டு முறை பாதியில் ஆட்சியை இழந்த பாஜக, இம்முறை ஐந்து வருடங்களை முழுமையாக ஆட்சி செய்தது. இவரது ஆட்சியில் தான் இந்திய விமானம் கடத்தப்பட்டது. 1999 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காத்மாண்டுவில் இருந்து டெல்லி வர இருந்த ஐசி 814 இந்திய விமாத்தை 5 பயங்கரவாதிகள் கடத்தினர். மேலும் 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 13-ம் நாள் இந்திய நாடாளுமன்ற தாக்குதலுக்கு உள்ளானது. பாஜக ஆட்சி காலத்தில் தான் குஜராத்தில் மதக்கலவரம் நடந்து 1,000 மேற்ப்பட்டோர் கொல்லப்பட்டனர். இவரது 5 வருட ஆட்சியில் தான் தேசிய நெடுஞ்சாலைத் திட்டம், வெளியுறவு கொள்கை மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்க்கொள்ளப்பட்டன. 

பல இன்னல்கள் இவரது ஆட்சி காலத்தில் வந்தாலும், அனைத்தையும் சமாளித்து, நாட்டிற்காக பல நல்ல திட்டங்கள் கொண்டுவந்தார் என்பதில் சந்தேகமில்லை. இவர் உடல்நலக் குறைவால் 2005 ஆம் ஆண்டு அரசியலில் இருந்து ராஜினமா செய்தார். ஓய்வு எடுத்த வந்த நிலையில், கடந்த இரண்டு வாரமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் நாள் காலமானார்.

50 வருடமாக திமுக தலைவர் மற்றும் ஐந்து முறை தமிழக முதல் அமைச்சராக விளங்கியவர் 1924-ல் சூன் மாதம் 3 ஆம் நாள் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்து, பின்னர் தேசிய அளவில் பேசப்பட்டவராக அரசியலில் வளர்ந்தவர் மு.கருணாநிதி. கருணாநிதி தன்னுடைய 14வது வயதில் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்டு அரசியலில் ஈடுபட முடிவு செய்தார். பல சமூக பணிகளிலும், விழிப்புணர்வு வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 

கருணாநிதி முதன்முதலில் துவங்கிய பத்திரிகையின் பெயர் மாணவ நேசன். 1941 ஆம் ஆண்டில் வெளியான மாணவ நேசன் ஒரு மாத இதழ். முதன் முதலில் கருணாநிதி தொடங்கிய அமைப்பு தமிழ் மாணவர் மன்றம். நீதிக்கட்சியை சேர்ந்த அழகிரிசாமியால் தன் சிறுவயதில் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர் கருணாநிதி. அதன் காரணமாகவே தம் மகனுக்கு அழகிரி என்று பெயர் சூட்டினார். தான் திராவிட சிந்தனையால் ஈர்க்கப்படாமல் இருந்தால் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருப்பேன் என்று ஒரு முறை கருணாநிதி கூறினார்.

Trending News