இதற்கு தோனி விளையாடவே வேண்டும்... கொந்தளித்த ஹர்பஜன் சிங் - என்ன விஷயம்?

Harbajan Singh Attacks MS Dhoni: தோனிக்கு பதில் சிஎஸ்கே அணியில் கூடுதலாக ஒரு வேகப்பந்துவீச்சாளரை விளையாட வைக்கலாம் என ஹர்பஜன் சிங் காட்டமான கருத்தை தெரிவித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : May 6, 2024, 11:41 AM IST
  • தோனி நேற்றைய பஞ்சாப் போட்டியில் 9வது வீரராக இறங்கினார்.
  • இதுகுறித்து ஹர்பஜன் சிங் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
  • சென்னை அணி நேற்று 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இதற்கு தோனி விளையாடவே வேண்டும்... கொந்தளித்த ஹர்பஜன் சிங் - என்ன விஷயம்? title=

Harbajan Singh Attacks MS Dhoni: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் (IPL 2024) லீக் சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான அணிகள் தலா 11 போட்டிகளை விளையாடிவிட்ட நிலையில், பிளே ஆப் சுற்றுக்கான (IPL Play Off) ரேஸ் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் புள்ளிப்பட்டியலில் (IPL 2024 Points Table) டாப்பில் உள்ளன. இரு அணிகளும் 16 புள்ளிகளுடன் மிரட்டலான பார்மில் இருப்பதால் இந்த அணிகள்தான் டாப் 2 இடங்களில் நிறைவு செய்யும் என கூறப்படுகிறது. 

தொடர்ந்து, 3வது மற்றும் 4வது இடத்தை பிடிக்கப்போவது யார் என்ற கேள்விதான் தற்போது அதிகமாகியிருக்கிறது. இந்த ரேஸில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings), சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் முன்னிலை வகிக்கின்றன. ஆர்சிபி அணிக்கும் இன்னும் சற்று வாய்ப்பிருக்கிறது எனலாம். குஜராத், பஞ்சாப் அணிகளுக்கு வாய்ப்பு மிக மிக குறைவாக உள்ளது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். மும்பை அணி தொடரை விட்டே வெளியேறிவிட்டது. 

காம்பினேஷனை கண்டுபிடிக்குமா சிஎஸ்கே?

அந்த வகையில், இனி வரும் ஒவ்வொரு போட்டியும் முக்கியமாகும். ஒரு போட்டியின் வெற்றி, தோல்வி என்பது மற்ற அணிகளின் பிளே ஆப் வாய்ப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை இந்தியன்ஸ் (SRH vs MI) அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை அணி வென்றால் சிஎஸ்கே, லக்னோ, டெல்லி அணிகளுக்கு சாதகமாக அமையும். அதுவே சன்ரைசர்ஸ் அணி வென்றால் முன் குறிப்பிட்ட அணிகளுக்கு சற்று பின்னடைவு ஏற்படும்.

மேலும் படிக்க | சிஎஸ்கே கோப்பை வெல்வது கடினம் தான்! அணியில் இருக்கும் முக்கிய பிரச்சனைகள்!

இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எடுத்துக் கொண்டால், நெட் ரன்ரேட்டில் எவ்வித பிரச்னையும் இல்லை. எனவே, மீதம் உள்ள மூன்று போட்டிகளையும் சிஎஸ்கே வென்றுவிட்டால் அந்த அணி தானாகவே பிளே ஆப் சுற்றுக்கு செல்லும். ஒரு போட்டியில் தோற்றால்தான் ரன்ரேட்டிலும் பிற போட்டிகளின் வெற்றி தோல்விகளும் சிஎஸ்கேவின் பிளே ஆப் சுற்று வாய்ப்பை தீர்மானிக்கும் எனலாம். அந்த வகையில் சிஎஸ்கே அணியில் தற்போது பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது, சரியான காம்பினேஷனை அடுத்த போட்டியில் கண்டுபிடிக்காவிட்டால் அந்த அணி வரும் போட்டிகளில் பெரிய அடியை வாங்கும். 

9வது இடத்தில் இறங்கிய தோனி...

ஓபனிங்கில் ரஹானே தொடர்ந்து மோசமாகவே விளையாடி வரும் சூழலில் அவருக்கு பதில் ரச்சின் ரவீந்திராவுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கலாம். மிடில் ஆர்டரில் மொயின் அலிக்கு தொடர்ந்து சான்ட்னருக்கு இடமளிக்கலாம். சான்ட்னர் புது பந்திலும் நன்றாக வீசுகிறார். ஆடுகளம் ஒத்துழைப்பு தராவிட்டாலும் தனது தனித்துவமான பந்துவீச்சு மூலம் பேட்டர்களை திணறவைப்பதில் சான்ட்னர் கில்லாடி. தற்போது முஸ்தபிசுர் ரஹ்மான், பதிரானா (Pathirana) ஆகிய இருவரும் இல்லாத சூழலில், கிலீசனை டெத் ஓவருக்கு வைத்துவிட்டு சான்ட்னரை பவர்பிளேவில் 2 ஓவர்கள் வீச வைக்கலாம். சான்ட்னர் பேட்டிங்கிலும் சற்று கைகொடுப்பார். 

இந்த நிலையில், நேற்று ரஹானே, ருதுராஜ், தூபே, மிட்செல், ஜடேஜா, மொயின் அலி, சான்ட்னர், ஷர்துல் தாக்கூர் என 8 பேட்டர்கள் இறங்கிய பின் 9வது வீரராக அதுவும் 19வது ஓவரில்தான் தோனி (MS Dhoni) களமிறங்கினார். சான்ட்னர் அவுட்டான போதே தோனி களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டாலும் சுமார் 4 ஓவர்கள் இருந்ததால் தோனி அப்போது களமிறங்கவில்லை. அவர் இந்த தொடர் முழுவதும் வெறும் ஹிட்டிங்கிற்கு மட்டுமே வலைப்பயிற்சி எடுக்கிறார் என சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக்கெல் ஹசி கூறியிருந்த நிலையில், கடைசி கட்டத்தில் இறங்கி பவுண்டரி விளாசும் நோக்கில்தான் தோனியும் நேற்று வந்தார். 

ஆனால், துரதிருஷ்டவசமாக ஹர்ஷல் பட்டேலின் அற்புதமான ஸ்லோ யார்க்கர் பந்தில் தோனி டக்அவுட்டாகி வெளியேறினார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், தோனி 9வது வீரராக களமிறங்கியது குறித்தும் பலர் விமர்சனம் எழுப்பியிருந்தனர். அதில் மூத்த இந்திய வீரரும், முன்னாள் சிஎஸ்கே வீரருமான ஹர்பஜன் சிங் (Harshal Patel) இதுகுறித்து விமர்ச்சித்துள்ளார். 

கொந்தளித்த ஹர்பஜன் சிங்

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேற்றைய பஞ்சாப் - சிஎஸ்கே போட்டியின் நேரலையில் பேசிய ஹர்பஜன் சிங்,"எம்எஸ் தோனி ஒன்பதாவது இடத்தில் பேட்டிங் செய்ய விரும்பினால் அவர் விளையாடவே வேண்டும். அவருக்கு பதில் வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை பிளெயிங் லெவன் அணியில் சேர்ப்பது நல்லது. அவர்தான் முடிவெடுக்கும் இடத்தில் இருக்கிறார், அவர் பேட்டிங் செய்ய வெளியே வராமல் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறார். 

ஷர்துல் தாக்கூரால் தோனியைப் போல ஷாட்களை அடிக்க முடியாது. தோனி ஏன் இந்த தவறை செய்தார் என்று எனக்கு புரியவில்லை. அவரது அனுமதியின்றி எதுவும் நடக்காது, அவரை 9வது இடத்தில் இறக்கும் இந்த முடிவை வேறு யாரோ எடுத்தது என்பதை ஏற்கவே மாட்டேன்" என்றார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க | சிஎஸ்கேவின் வெறித்தனமா பௌலிங்... தோல்வியால் பஞ்சரானது பஞ்சாப் - டாப்பில் சென்னை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News