ஸ்டெர்லைட்: தூப்பாக்கி சூடு அரசின் கையாலாகத்தனத்தை காட்டுகிறது -ஸ்டாலின்

தூத்துக்குடியில் நடைபெற்ற அசம்பாவிதத்திற்கு முழு காரணம் தமிழக அரசின் கையாலாகத்தனமும், உளவுத்துறையின் தோல்வியும் தான் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : May 22, 2018, 06:25 PM IST
ஸ்டெர்லைட்: தூப்பாக்கி சூடு அரசின் கையாலாகத்தனத்தை காட்டுகிறது -ஸ்டாலின் title=

தூத்துக்குடியில் நடைபெற்ற அசம்பாவிதத்திற்கு முழு காரணம் தமிழக அரசின் கையாலாகத்தனமும், உளவுத்துறையின் தோல்வியும் தான் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பித்தார் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளர். தங்கள் உரிமைக்காகவும், தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனக்கூறி அமைதி பேரணியாக பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி சென்றனர். அப்பொழுது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். 

இதனால் போலீஸ் மற்றும் பொது மக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் கலவரமாக மாறியதால், போலீசார் தடியடி நடத்தினார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்கள் வீசினர். இந்த கலவரத்தில் வாகனங்கள் தீ வைக்கப்பட்டன. பின்னர் கலெக்டர் அலுவலகத்திற்குள் புகுந்த போராட்ட கும்பல் கதவு, ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார்கள்.

அவர்களை கட்டுப்படுத்த எந்தவித அறிவிப்பும் இன்றி போலீசார் தூப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்த தூப்பாக்கி சூட்டில் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர். 30-க்கு மேற்பட்டோர் படு காயம் அடைந்துள்ளனர். இச்சம்பவத்தை குறித்து பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், இதுகுறித்து திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூரியதாவது, 

"நீண்ட நாட்களாக தொடர்ந்து ஸ்டர்லைட் போராட்டம் நடத்தி வருவதை அதிமுக அரசு கண்டு கொள்ளவும் இல்லை. சுமூக தீர்வு காணவும் இல்லை. வழக்கம் போல் மக்கள் போராட்டத்தை முடக்க நினைத்த அதிமுக அரசின் அலட்சியத்தாலலேயே இன்று மக்கள் பேரணி நடத்தி அது துப்பாக்கி சூடு வரை சென்றுள்ளது. இன்றைய பேரணி பற்றி முன்பே அறிந்த காவல்துறை எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காதது கடும் கண்டனத்திற்குரியது. 

இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற அசம்பாவிதத்திற்கு முழு காரணம் இந்த அரசின் கையாலாகத்தனமும், உளவுத்துறை தோல்வியும் தான். இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், ஸ்டர்லைட் ஆலையை அரசு உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் மக்களின் நலனுக்காக நடைபெறும் போராட்டங்கள் ஜனநாயக ரீதியிலும், அறவழியிலும் நடந்திடும் வகையில் எதிர்காலத்திலாவது இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்

Trending News