சாதிப்பிரிவுகள் அதிகரித்துவிட்டன... அதுதான் பிரச்னையே - ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து!

Governor RN Ravi: முன்பை விட தற்போதைய காலகட்டத்தில் சாதிப் பிரிவுகள் இரட்டிப்பு எண்ணிக்கையாக அதிகமாகியுள்ளது எனவும், அது சார்ந்த பிரச்சனைகளும் அதிகமாகியுள்ளது எனவும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 5, 2023, 03:40 PM IST
  • இந்தியாவில் டிஜிட்டல் புரட்சி நடைபெற்று வருகிறது - ஆளுநர்
  • கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது - ஆளுநர்
சாதிப்பிரிவுகள் அதிகரித்துவிட்டன... அதுதான் பிரச்னையே - ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து! title=

Governor RN Ravi Speech: கோவையில் உள்ள கே.ஜி. பவுண்டேஷன் அமைப்பின் சார்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கும் விழா சரவணம்பட்டியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல் (KGISL) வளாகத்தில் இன்று (ஏப். 5) நடைபெற்றது. இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். 

'கம்பர் போன்று'

இந்நிகழ்வில் உரையாற்றிய ஆர்.என். ரவி,"சமூகத்திற்கு பல்வேறு வகையில் பங்களிப்புகளை செலுத்தி வரும், இன்று விருது பெற்ற ஆளுமைகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்கள் போன்று பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிபவர்களால் தான் இந்தியா உருவாக்கப்படுகிறது. கே.ஜி. மருத்துவ நிர்வாகத்தின் 49ஆவது ஆண்டு விழாவாக இந்நிகழ்வு உள்ளது.

இதன் நிறுவனர் 50 வருடங்களுக்கு முன்பே மருத்துவ சேவையை வழங்க வேண்டும் என முடிவெடுத்து சேவை செய்துள்ளார். மருத்துவம், கல்வி, ஆன்மீகம் என பல்வேறு துறைகளில் இந்நிறுவனம் சிறந்த சேவையை வழங்கி வருகிறது. ஸ்ரீ ராமர் குறித்து எழுத வேண்டும் என கம்பர் எண்ணியது போல, இந்த சமூகத்திற்கு உன்னதமான சேவையை வழங்க வேண்டும் என இந்நிறுவனத்தின் நிறுவனர் எண்ணியுள்ளார். 

மேலும் படிக்க | நிலக்கரி சுரங்க திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை தேவை- எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

அடிப்படை தேவை

இந்த நிறுவனம் சிறப்பான சேவையை தற்போது வரை வழங்கி வருகிறது. கடந்த காலங்களில் நமது நாட்டு மக்களுக்கு மருத்துவம், கல்வி ஆகியவை கிடைக்காத சூழல் இருந்து வந்தது. அடிப்படை தேவைகள் கிடைக்காமல் வறுமை நிலவி வந்தது. இதனைப் பூர்த்தி செய்ய பல்வேறு மருத்துவ கட்டமைப்புகள் அமைக்கப்பட்ட போதும் சில மக்களுக்கு மருத்துவ சேவையை கிடைக்கவில்லை. 

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பின்பும் ஆங்கிலேயர்களின் எண்ணத்தை போன்றே நமது நாட்டை மொழியாலும், இனரீதியாகவும் பிரித்த கண்ணோட்டம் நிலவி வந்ததே இதற்கு காரணம். இந்த நிலையில் இந்தியாவை ஒரே நாடாக கருதி பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அமல்படுத்தப்பட்ட பின்பு இந்த நிலைமை மாறியுள்ளது. 

மகளிர் சக்தி

மருத்துவம், கல்வி, குடிநீர், சமையல் எரிவாயு, வீடு ஆகியன அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் டிஜிட்டல் புரட்சி நடைபெற்று வருகிறது. உலகின் மிகச்சிறந்த டிஜிட்டல் சேவைகள் உள்ள நாடாக இந்தியா உள்ளது. இன்று இணையதள பயன்பாடு அனைவருக்கும் சென்றுள்ளது. தனி மனிதரின் இணையதள பயன்பாட்டு அளவு அதிகரித்துள்ளது. 

இதற்கு காரணம் அனைத்து பகுதிகளுக்கும் தொழில்நுட்பங்களை கொண்டு சென்றதும், அவற்றின் விலையை  குறைத்ததும்தான். உலகப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நாடாக இந்தியாவை உலக நாடுகள் எதிர்நோக்கி உள்ளன. இந்திய நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதமாக மகளிர் சக்தி உள்ளது. மகளிர் சுகாதாரம், அவர்களுக்கான கல்வி ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

'அனைவரும் ஒரே குடும்பம்'

கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியாவில் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. சமூக நீதிக்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதும், மக்கள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் மலம் கலப்பது உள்ளிட்ட பல்வேறு சமூக நீதி சார்ந்த பிரச்சனைகளையும் செய்தித்தாள்களில் காண முடிகிறது. ஏழை எளிய அடித்தட்டு மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். 

பிரிவினை வாத அரசியலை தவிர்த்தால் தான் சமூக பிரச்சனைகளை சரி செய்ய முடியும். அதற்கு நாம் அனைவரும் ஒரே குடும்பம் என கருத வேண்டும். அந்த வகையில் தான் மருத்துவ காப்பீடு திட்டமாக 5 லட்சம் ரூபாய் வழங்கும் ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு திட்டம் ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

18ஆம் நூற்றாண்டு வரை இந்தியா உலக அளவில் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருந்துள்ளது. அதற்குப் பிறகான பிரிவினைவாத அரசியலால்தான் நமது நாடு பின்தங்கி இருந்தது. 1951ஆம் ஆண்டில் இருந்த சாதிப் பிரிவுகள் இன்று இரட்டிப்பு எண்ணிக்கையாக அதிகமாகியுள்ளது. அது சார்ந்த பிரச்சனைகளும் அதிகமாகியுள்ளது. சாதிகளும் சாதிக்குள்ளான உட்பிரிவுகளும் போன்ற பிரிவினை எண்ணங்களும் நமது நாட்டை பாதித்து வருகின்றன.

நாம் அனைவரும் ஒரே மரத்தின் இலைகளைப் போன்றவர்கள். ஒரே குடும்பத்தினர். மொழி, நிலம், இனம் ஆகியவற்றை தாண்டி நாம் அனைவரும் ஒரே குடும்பம் என கருத வேண்டும். அதை நோக்கி தான் இந்தியா சென்று வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா முழுமையாக வளர்ச்சி அடைந்த நாடாக திகழும். இது மக்களின் பங்களிப்பால்தான் சாத்தியமாகும்.

தொழில்நுட்பம், ஸ்டார்ட் அப் என பல்வேறு துறைகளில் இந்தியா தலைமைத்துவத்தில் உள்ளது. இதில் நமது நாட்டின் இளைஞர்களின் பங்கு முக்கியமாக உள்ளது. நமது நாட்டின் நூறாவது சுதந்திரத்தை கொண்டாடும் சூழலில் இந்தியா உலக நாடுகளுக்கு தலைமையாக திகழும்" என தெரிவித்தார்.

மேலும் படிக்க | பொருளாதாரத்தில் பின்தங்கிய, மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு 1 கோடி ரூபாய் செலவில் திருமணம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News