ஆருத்ரா நிதி மோசடி விவகாரம் - முதலமைச்சர் முக.ஸ்டாலின் விளக்கம்

பொதுமக்களிடம் வசூல் செய்து சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 21, 2023, 01:25 PM IST
ஆருத்ரா நிதி மோசடி விவகாரம் - முதலமைச்சர் முக.ஸ்டாலின் விளக்கம் title=

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீட்டு பணத்திற்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி கொடுப்பதாக கூறி சுமார் ரூ. 2,438 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் அந்த நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதுடன் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையிடமும் புகார் அளித்தனர். இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பாஜகவில் மாநில பொறுப்பில் இருந்த ஹரீஷ் உள்ளிட்ட 11 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மோடியில் ஈடுபட்டதாக 21 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். 

இந்த வழக்கில் பிரபல நடிகரும், பாஜக பிரமுகருமான ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. ரூசோ என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆருத்ரா மோசடியில் ஆர்கே சுரேஷ் குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் காவல்துறைக்கு கிடைத்திருக்கிறது. ஆர்.கே.சுரேஷ் வங்கிக் கணக்கிற்கு கோடிக் கணக்கில் பணப் பரிவர்த்தனைகள் நடந்திருப்பதையும் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் கண்டுபிடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விசாரணைக்கு ஆஜராகுமாறு பலமுறை சம்மன் அனுப்பியும் ஆர்கே சுரேஷ் நேரில் ஆஜராகவில்லை. ஆனால், வழக்கறிஞர்கள் மூலம் விளக்கம் அளிப்பதாக அவர் தரப்பில் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஸ்டாலின், ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்களின் ப்ளூ டிக் நீக்கம் - பின்னணி இதுதான்

இது தொடர்பான விசாரணை வேகமெடுத்திருக்கும் நிலையில், தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவையில் இது குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதிநிறுவனங்களின் மோசடி குறித்து பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், " நேற்று உறுப்பினர்களின் பேசும்போது, ஆருத்ரா போன்ற நிதி நிறுவனங்களின் மோசடிகள் பற்றிக் குறிப்பிட்டு பேசினார்கள். நான் நேற்றே இதுகுறித்து விளக்கமாக பதிலளித்து இருக்கிறேன். 

இருந்தாலும் ஒன்றை மட்டும் அழுத்தம் திருத்தமாக இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன். மக்களிடம் ஆசையைத் தூண்டி இதுபோன்ற நிறுவனங்கள் ஏமாற்றுகின்றன. இத்தகைய நிதி நிறுவனங்கள் அனைத்தையும் கண்காணிக்குமாறு காவல்துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இத்தகைய நிதி நிறுவனங்களின் மோசடிகளை தடுக்க முதன்முதலில் சட்டம் கொண்டு வந்ததும், கலைஞர் தலைமையிலான திமுக அரசுதான் என்பதைக் குறிப்பிட்டுக்காட்ட விரும்புகிறேன். மேலும், இதுபோன்ற நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யும்போது பொதுமக்கள் எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க | AIADMK: அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்தினால் வழக்கு - எடப்பாடி அணி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News