ஜல்லிக்கட்டு போட்டி - புதிய விதிமுறைகளுடன் அரசாணை வெளியீடு!

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது மற்றும் பங்கு பெறுவது தொடர்பாக தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 10, 2022, 03:44 PM IST
  • காளைகளை பதிவு செய்யும் பொழுது, உரிமையாளர் மற்றும் உதவியாளர் ஆகியோரும் பதிவு செய்தல் வேண்டும்.
  • ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்கள் வரை மட்டுமே அனுமதி
ஜல்லிக்கட்டு போட்டி - புதிய விதிமுறைகளுடன் அரசாணை வெளியீடு!  title=

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது மற்றும் பங்கு பெறுவது தொடர்பாக தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.  அதில் " கோவிட் 19 நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மருத்துவ நிபுணர்களின் கருத்துக்களின் அடிப்படையில் 10.01.2022 வரை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு செய்து அரசாணைகள் வெளியிடப்பட்டு உள்ளது.  தமிழ்நாட்டின் பாரம்பரிய மற்றும் பண்பாட்டை பாதுகாக்கும் வகையில் நடத்தப்பட்டுவரும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மக்கள் பெருமளவில் மகிழ்ச்சியோடு பங்குபெற்று வருகின்றனர். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி என்பது காளைகள் மற்றும் மாடு பிடிப்பவர் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பார்வையாளராக பங்கேற்கும் நிகழ்ச்சியாகும். திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விளையாட்டுப் போட்டிகள் நடத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் உடன் தற்போது கொரோனா காரணமாக எதிர்வரும் 2022ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை கீழ்கண்ட நிபந்தனைகளுடன் நடத்த அனுமதித்து அரசு ஆணையிடுகிறது. 

ALSO READ | குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் - டிஜிபி உத்தரவு!

Covid-19 நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்: 

1. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களும் பெரும்பங்கு வகிப்பதால் ஒரு காளையுடன் சுமார் ஐந்து முதல் ஆறு நபர்கள் வருவது வழக்கம். இதனை கட்டுப்படுத்தி ஒரு காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கம் உள்ள ஒரு உதவியாளர், இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டதற்காக சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் கோவிட் தொற்று இல்லை என்பதற்கான சான்று ஆகியவற்றை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். காளையின் உரிமையாளர் மற்றும் அவரது உதவியாளருக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அடையாள அட்டை வழங்கப்படும். மேலும் அடையாள அட்டை இல்லாத நபர்களுக்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் நுழைய அனுமதி இல்லை. 

2. காளைகளை பதிவு செய்யும் பொழுது அவற்றின் உரிமையாளர் மற்றும் உடன் வரும் உதவியாளர் ஆகியோரும் பதிவு செய்தல் வேண்டும்.  ஜல்லிக்கட்டில் பங்குபெறும் காளைகளின் பதிவு நிகழ்ச்சி நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு முடிக்கப்பட வேண்டும். 

3. ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது. 

ALSO READ | இந்தியாவில்  பூஸ்டர் தடுப்பூசி - பதிவு செய்வது எப்படி?

4. எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்துகொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப் படுகிறது. 

5. ஜல்லிக்கட்டில் பங்குபெறும் வீரர்களுக்கு, நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து மூன்று நாட்களுக்கு முன்பாக பதிவு செய்து, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.  மேலும் அடையாள அட்டை இல்லாத வீரர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற வளாகத்தில் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள். 

6. ஜல்லிக்கட்டில் பங்குபெறும் வீரர்களுக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து இரண்டு நாட்களுக்குள் தொற்று இல்லை என்பதற்கான சான்று பெறப்பட்டவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். 

jallikattu

7. தமிழ்நாடு அரசினால் வெளியிடப்படும் கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி பார்வையாளர்கள், திறந்தவெளி அரங்கின் அளவிற்கேற்ப சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அதிகபட்சமாக 150 பார்வையாளர்கள் அல்லது அனுமதிக்கப்பட்ட இருக்கை எண்ணிக்கையில் 50% மிகாமல் இவற்றில் எது குறைவோ அந்த எண்ணிக்கையில் பார்வையாளர் அனுமதிக்கப்படுவார்கள்.  பார்வையாளர்கள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து இரண்டு நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை என்பதற்கான சான்று ஆகியவற்றை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். 

8. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மேற்பார்வை செய்யும் அனைத்து துறை அலுவலர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து இரண்டு நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை என்பதற்கான சான்று ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். 

9. அனைத்து துறை அலுவலர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும், பார்வையாளர்களும் மற்றும் ஊடகத்துறை சார்ந்தவர்களும் அரசினால் அறிவுறுத்தப்பட்ட நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். 

10. வெளியூரில் வசிப்பவர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தொலைக்காட்சி ஒன்று இணைய வழியாக காண அறிவுறுத்தப்படுகிறது. 

11. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்த அரசின் முன் அனுமதி பெற்று பிராணிகள் வதை தடுப்பு விதிகள், 2017, அரசினால் வெளியிடப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றுடன் அரசினால் விதிக்கப்படும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் அனைத்தும் பின்பற்றப்பட வேண்டும்" என அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.

ALSO READ | Pongal 2022: முகூர்த்த காலுடன் தொடங்கியதா அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News