அமைச்சர் பொன்முடி வீட்டில் ரெய்டு... செந்தில் பாலாஜிக்கு அடுத்து அமலாக்கத்துறையின் ஆக்சன்

Minister Ponmud ED Raid: சென்னை, விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு தொடர்பான 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Jul 17, 2023, 09:14 AM IST
அமைச்சர் பொன்முடி வீட்டில் ரெய்டு... செந்தில் பாலாஜிக்கு அடுத்து அமலாக்கத்துறையின் ஆக்சன் title=

Minister Ponmudi ED Raid: சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள உயர்கல்வி அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சிஆர்பிஎஃப் காவலர்களின் உதவியுடன் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. 

சென்னை மட்டுமின்றி பொன்முடிக்குச் சொந்தமான பிற இடங்களிலும் இந்த சோதனை நடைபெறுவதாக தெரிகிறது. அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்தி அவரை கைது செய்த நிலையில், தற்போது அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

9 இடங்களில் சோதனை

ஏழு பேர் கொண்ட அதிகாரி குழுவுடன் பாதுகாப்பு பணிக்காக, மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் பணியில் உள்ளனர். காலை 7 மணி முதல் தீவிர சோதனை என கூறப்படுகிறது. தற்போது சோதனை நடைபெறும் சென்னை இல்லத்தில் அமைச்சர் பொன்முடி இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

சென்னை, விழுப்புரம் மாவட்டங்களில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்பான 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. மேலும், கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினரும், அமைச்சர் பொன்முடியின் மகனுமான கௌதம் சிகாமணியின் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | "படிப்பு மட்டும்தான் யாராலும் திருட முடியாத நிலையான சொத்து" - முதல்வர் மு.க.ஸ்டாலின்

விழுப்புரம் சண்முகபுரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. விழுப்புரத்தில் வீடு பூட்டியிருந்ததால் காத்திருந்த அதிகாரிகள், வீட்டை திறக்க வைத்து சோதனை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் விக்கிரவாண்டியில் உள்ள சூர்யா அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தப்படுகிறது. 

எதன் அடிப்படையில் சோதனை?

மேலும், எந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்துகின்றனர் என இதுவரை தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு கௌதம் சிகாமணியின் ரூ.8.60 கோடி சொத்துகளை அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டிருந்தது. அமைச்சர் பொன்முடி, மக்களவை உறுப்பினர் கௌதம் சிகாமணி ஆகியோர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

கடந்த 2012ஆம் ஆண்டு செம்மண் குவாரி தொடர்பாக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம் சிகாரமணி மீது அமலாக்கதுறை வழக்குப்பதிவு செய்தது. அதன் அடிப்படையில் தற்போது 11 ஆண்டுகளுக்கு பின் சோதனை நடத்தப்பட்டு வருகிறதாகவும் கூறப்படுகிறது. 

எதிர்க்கட்சி கூட்டமும் ED ரெய்டும்

பெங்களுருவில் இன்று 2 எதிர்க்கட்சிகளின் கூட்டம் தொடங்க உள்ள நிலையில், அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது. அதே போல் பாட்னா எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது நினைவுக்கூரத்தக்கது. 

நெருக்கடிக்கு உள்ளாகும் திமுக அமைச்சர்கள்

ஆளும் திமுக அமைச்சரவையில் செந்தில் பாலாஜியை தொடர்ந்து, இரண்டாவது அமைச்சராக பொன்முடி அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளார். ஜூன் 13ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து, ஜூன் 14ஆம் தேதி நள்ளிரவில் அவரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து முதற்கட்டமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 

பின்னர், அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக தனியார் மருத்துவமனைக்கு நீதிமன்ற அனுமதியுடன் மாற்றப்பட்டார். தற்போதும் அவர் அங்கு சிகிச்சையில் உள்ளார். இருப்பினும், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூலை 26ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, அவரின் கைது செல்லும் என செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும் படிக்க | பேனா நினைவுச்சின்னம் தொடங்கப்படுமா? எழும் சந்தேகங்களும் விளக்கமும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News