புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குக -மு.க.ஸ்டாலின்!

புதுச்சேரிக்கு உடனடியாக மாநில அந்தஸ்த்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை! 

Last Updated : Jul 22, 2018, 06:55 PM IST
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குக -மு.க.ஸ்டாலின்!  title=

புதுச்சேரிக்கு உடனடியாக மாநில அந்தஸ்த்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை! 

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்த்து உடனடியாக வழங்க கோரி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், குறிப்பிட்டுள்ளதாவது...! 

“பா.ஜ.க-வின் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும்” என்ற நிபந்தனையுடன் புதுச்சேரி பட்ஜெட்டிற்கு அம்மா நில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்திருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது.

துணை நிலை ஆளுனர் “மூன்று பாரதிய ஜனதா கட்சி நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டமன்றத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ஏழரை லட்சம் புதுச்சேரி மக்களின் நலனை புறக்கணிக்கும் வகையில் நிதி மசோதாவை நிறைவேற்றவிடாமல் இத்தனை நாட்கள் கிடப்பில் போட்டு வைத்திருந்தார்” என்பதும், “இப்போது ஒப்புதல் அளிக்கும் போது கூட புதுச்சேரி சட்டமன்றத்திற்கே நிபந்தனை விதிப்பதும்” மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்றத்தின் கண்ணியத்தை முற்றிலும் சீர்குலைக்கும் மிக மோசமான அரசியல் சட்ட விரோதச் செயலாகும்.

பாரதிய ஜனதா கட்சியில் உள்ள அதுவும் மூன்று பேரின் தனிமனித நலனுக்காக, புதுச்சேரிவாழ் ஏழரை லட்சம் மக்களின் பொது நலனை முடக்கி வைத்த துணை நிலை ஆளுநர் அந்தப் பதவியில் நீடிக்கும் தார்மீக தகுதி இருக்கிறதா என்பதை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு மதிப்பீடு செய்ய வேண்டும். 

இது போன்று திட்டமிட்டு உருவாக்கிய “நிதி நெருக்கடி”க்குப் பிறகு, “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும்” என்று புதுச்சேரி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இதன் மூலம், புதுச்சேரி மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும் எதிரொலித்திருக்கிறது. “புதுச்சேரி மக்களின் நலனுக்காகவே பாடுபடுகிறேன்” என்று இதுவரை பேசி வந்த துணை நிலை ஆளுநரும், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசும், “புதுச்சேரி மக்களின் திட்டங்களுக்கும், மாநில வளர்ச்சிக்கும் தேவையான” நிதி மசோதாவை பா.ஜ.க.வின் குறுகிய அரசியல் லாபத்திற்காக போட்டி போட்டுக்கொண்டு வேண்டுமென்றே தாமதம் செய்திருப்பது மக்களாட்சியின் மாண்பைச் சிதைக்கும் செயலாக அமைந்திருக்கிறது.

“புதுச்சேரியின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் வளர்ச்சித் திட்டங்கள் அதிகாரக் குழப்பங்களுக்கு இடையில் சிக்கிக் கொள்ளாமல் இருக்கவும் உடனடியாக மாநில அந்தஸ்து வழங்கிட வேண்டும் என்றும், அது வரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சரின் அதிகாரங்களில் குறுக்கிட்டுப் பிரவேசிப்பதை நிறுத்திக் கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கு கண்டிப்பான அறிவுறுத்தல் வழங்கிடவேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

 

Trending News