தமிழகம், புதுச்சேரியில் தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது!

பாராளுமன்றத்துக்கு 2வது கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை முதல் தொடங்கியது. 

Last Updated : Apr 18, 2019, 07:39 AM IST
தமிழகம், புதுச்சேரியில் தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது! title=

பாராளுமன்றத்துக்கு 2வது கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை முதல் தொடங்கியது. 

தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

மீதமுள்ள தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாக காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் சோதனை செய்து பார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற வருகிறது.

இந்த தேர்தலில் அதிமுக தலைமையில் ஓர் அணியும், திமுக  தலைமையில் மற்றொரு அணியும், அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் களத்தில் உள்ளன.

தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் 38 நாடாளுமன்ற தொகுதிகளில் மொத்தம் 822 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதேபோல், 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 269 பேர் போட்டியிடுகின்றனர். 

இந்த நிலையில், இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு இடைவிடாமல் நடைபெறும். சித்திரை திருவிழாவை முன்னிட்டு, மதுரை பாராளுமன்ற தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு முதல் 2 மணி நேர இடைவெளியில் பதிவான வாக்கு சதவீத விவரங்கள் வெளியிடப்படும். ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும், வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக பெட்டியில் வைத்து அடைக்கப்பட்டு ‘சீல்’ செய்யப்படும். பின்னர், போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும்.

மே 19ம் தேதி, தமிழகத்தில் மீதமுள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் அன்றுடன் முடிவடைகிறது. மே மாதம் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

Trending News