இல்லாத அதிகாரத்தை இருப்பதாகக் காட்டி மிரட்டும் ஆளுநர் -வேல்முருகன் கண்டனம்

இல்லாத அதிகாரத்தை இருப்பதாகக் காட்டி தமிழக மக்களை மிரட்டல் தோணியில் எச்சரிக்கும் தமிழக ஆளுநருக்கு கண்டனத்தை தெரிவித்த தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 25, 2018, 03:37 PM IST
இல்லாத அதிகாரத்தை இருப்பதாகக் காட்டி மிரட்டும் ஆளுநர் -வேல்முருகன் கண்டனம் title=

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவியேற்ற நாள் முதல் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறார். இதற்கு பல அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஆளுநர் ஆய்வுக்கு செல்லும் இடங்களில் தமிழக எதிர்கட்சியான திமுக கறுப்பு கொடி காட்டி வருகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த ஆளுநர், ஒரு மாநிலத்தின் எந்த பகுதிக்கும் செல்ல ஆளுநருக்கு அதிகாரம் உண்டு. ஆளுநரின் ஆய்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும். என்னை பணி செய்ய விடாமல் தடுப்பவர்களுக்கு இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 124-ன் படி 7 ஆண்டு சிறை தண்டனையும், அபராதம் விதிக்கப்படும் என ஆளுநர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இதற்கு பல அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் தலைவர்கள் அறிக்கையும் வெளியிட்டு வருகின்றனர். 

அந்த வகையில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், தனது அறிக்கையில் கூறியதாவது, 

தன்னைப் பணி செய்யவிடாமல் தடுப்பவர்களுக்கு இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 124-ன்படி 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் ஆளுநர்!

இல்லாத அதிகாரத்தை இருப்பதாகக் காட்டி தமிழக மக்களுக்கே விடும் மிரட்டல் மற்றும் எச்சரிக்கை இது!

உண்மையில் அவர்தான் வரம்பு மீறி மாவட்ட ஆய்வினை மேற்கொள்வதன் மூலம் தமிழக அமைச்சரவையின் பணியையே கபளீகரம் செய்கிறார்!

அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், உடனடியாக மத்திய அரசு அவரைத் திரும்பப்பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாவட்டங்களுக்குச் சென்று, அங்கே மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளையும் கூட்டி விவாதித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இது அவரது பதவி சார்ந்த பணி அல்ல; ஆனாலும் வரம்பு மீறி இப்படி செயல்பட்டுவருகிறார்.

இதனைச் சுட்டிக்காட்டி தமிழக எதிர்க்கட்சிகளும் மக்களும் அவருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் போராட்டம் வரைக்கும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆளுநரோ அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை; கண்டுகொள்ளவும் அவர் தயாரில்லை.

ஆனால் தன்னைப் பணி செய்யவிடாமல் தடுப்பவர்களுக்கு இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 124-ன்படி 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்!

விருதுநகர் மாவட்டம் தேவங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை தகாத செயலுக்கு அழைத்ததாக விசாரணையில் உள்ளார்; அவர் மாணவிகளிடம் பேசியதாக வெளியான ஆடியோவில் ஆளுநரையும் குறிப்பிட்டதாக அவர் மீதும் புகார் எழுந்தது; தனக்கு எதிரான இந்தப் புகார் தொடர்பாக உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டார் ஆளுநர்.

இப்படி விசாரணைக்கு உத்தரவிட அதிகாரம் இல்லாத நிலையிலும் அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாக அதைச் செய்தார் அவர்.

இப்போதும் அப்படித்தான் தனக்கு இல்லாத அதிகாரத்தை இருப்பதாகக் காட்டி, தன்னைப் பணி செய்யவிடாமல் தடுப்பவர்களுக்கு இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 124-ன்படி 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடுகிறார்.

இது, இல்லாத அதிகாரத்தை இருப்பதாகக் காட்டி தமிழக மக்களுக்கே விடும் மிரட்டல் மற்றும் எச்சரிக்கையாகும்.

அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு கண்டனத்தைத் தெரிவிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

மாவட்டங்கள் தோறும் ஆளுநரின் ஆய்வு என்பது, மக்கள் தேர்ந்தெடுத்த மாநில அரசின் பணி, கடமை, உரிமை மற்றும் அதிகாரத்தில் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும் மரபுகளுக்கு மாறாகவும் தலையிடுவதாகும்; கூட்டாட்சி முறை, மாநில சுயாட்சி மற்றும் ஜனநாயகத்தையே இழிவுபடுத்துவதாகும்.

எனவே ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், உடனடியாக அவரைத் திரும்பப்பெற்று கொள்ளுமாறு வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Trending News