மழை பாதித்த பகுதிகளை இன்று ஆய்வு செய்கிறது மத்திய குழு

வெள்ளம் பாதிப்பு குறித்து பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்த பின்பு அறிக்கை முழுமையாக மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்படும்  என மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தெரிவித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 22, 2021, 09:21 AM IST
மழை பாதித்த பகுதிகளை இன்று ஆய்வு செய்கிறது மத்திய குழு title=

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான குழுவினர் சென்னை வந்தனர். இந்த குழுவில் விவசாயம், நிதி, நீர்வளம், மின்சாரம், போக்குவரத்து, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

மத்திய குழு உறுப்பினர்கள் 2 பிரிவாக பிரிந்து சென்று வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் நாளையும் நாளை மறுநாளும் ஆய்வு நடத்த இருக்கின்றனர். அதன் பின்னர்,  நவம்பர் 24-ல் முதல்-அமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசிக்க உள்ளனர்.

இதற்கிடையில், சென்னை வந்தடைந்த மத்திய குழுவினர், தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டனர். தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், வருவாய்த் துறை, மின் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை, வேளாண்துறை, நிதித்துறை, ஊரக உள்ளாட்சி துறை, சுகாதாரம் உள்ளிட்ட துறைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழகத்தில் மழை வெள்ள (TN Rain) பாதிப்புகள், புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் மூலமாக மத்திய குழுவிற்கு விளக்கப்பட்டது. இதில், குறிப்பிட்ட நாட்களில் 521% மழை அதிகமாக பெய்ததாகவும், சென்னையில் 778 இடங்களில் மழை நீர் தேங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது

தமிழகம் முழுவதும் 1,236 கிராமங்கள் பாதிக்கப்பட்டதாகவும், 49,900 பொதுமக்கள் மீட்கப்பட்டதாகவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி 100 மி.மீ மழையும், 13ம் தேதி 109 மி.மீ மழையும் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டது. 713 கி.மீ தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலைகள் பாதிக்கப்பட்டதாகவும், 624 கி.மீ நகராட்சி சாலைகள் பாதிக்கப்பட்டதாகவும், 39 அரசு கட்டிடங்கள் பாதிப்பிற்கு உள்ளாகியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இறுதியாக தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.2629 கோடி வழங்க வேண்டுமெனவும் கோரப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தை தொடர்ந்து, சென்னை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய ரிப்பன் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றனர்.

ALSO READ | தமிழகத்தின் 11 மாவட்டங்களில் 2 நாட்கள் மத்திய குழு நேரில் ஆய்வு

சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகைக்கு சென்ற மத்திய குழுவினர், அங்கு வைக்கப்பட்டிருந்த சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் ஏற்பட்ட மழை பாதிப்பு குறித்த புகைப்படங்களைப் பார்வையிட்டனர். மேலும், அவர்களுக்கு புகைப்படங்கள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப. விளக்கினார்.

அதனை தொடர்ந்து  ரிப்பன் மாளிகையில் மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நாளை முதல் 2 நாட்கள் ஆய்வு செய்ய உள்ளோம்.  24ம் தேதி முதல்-அமைச்சருடன் ஆலோசனை நடத்திவிட்டு,  வெள்ளம் பாதிப்பு குறித்து பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்த பின்பு அறிக்கை முழுமையாக மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றார்.

ALSO READ | மூன்று வேளாண் சட்டங்கள் பற்றிய விரிவான தகவல் & கடந்து வந்த பாதை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News