ரூ.8 லட்சத்தை டிப்ஸாக கொடுத்த நபர்... ஷாக்கான உணவக பணியாளர்கள் - காரணம் என்ன?

Bizarre News: அமெரிக்காவில் உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர் சுமார் ரூ.8 லட்சம் மதிப்பிற்கு டிப்ஸ் கொடுத்த சம்பவம் கேட்போரை மிகவும் அதிர்ச்சி கலந்த உற்சாகத்தை அளித்தது. அதுகுறித்து இங்கு முழுமையாக காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Feb 20, 2024, 10:13 AM IST
  • அவர் வெறும் 2 ஆயிரம் ரூபாய்க்குதான் சாப்பிட்டுள்ளார்.
  • சாப்பிட்ட தொகையை விட டிப்ஸ் கொடுத்த தொகை 30,835 மடங்கு அதிகம்
  • இந்த டிப்ஸிற்கான காரணத்தையும் அந்த நபர் தெரிவித்துள்ளார்
ரூ.8 லட்சத்தை டிப்ஸாக கொடுத்த நபர்... ஷாக்கான உணவக பணியாளர்கள் - காரணம் என்ன? title=

Bizarre News: "மனிதன், மகத்தான சல்லிப்பயல்" என்பது தமிழ் எழுத்தாளர் ஜி. நாகராஜின் புகழ்பெற்ற வாசகம் ஆகும். ஆனால், இதில் பலருக்கும் மாற்றுக்கருத்து வந்து போகும், அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப... இதை ஜெயகாந்தன் சொல்வது போல்தான், "வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயங்கள்". 

ஒருவன் அவன் வாழ்வின் ஒரு கட்டத்தில், ஒரு குறிப்பிட்ட செயலை செய்தான் என்பதற்காக அதுதான் அவனின் ஒட்டுமொத்த வாழ்வு என்று யாராலும் அறுதியிட்டுச் சொல்லிவிட முடியாது அல்லவா... அதேபோன்று, ஒருவர் செய்யும் செயல் அது பெரியதோ சிறியதோ சிலரிடம் பெரிய தாக்கத்தை கூட ஏற்படுத்தலாம். அதாவது, அது நல்ல செயலாகவும் இருக்கலாம், தீய செயலாகவும் இருக்கலாம். 

சுமார் ரூ.8 லட்சம் டிப்ஸ்

அந்த வகையில், அமெரிக்காவில் ஒருவர் தான் உணவருந்த சென்ற ஒரு உணவகத்தில் செய்த ஒரு உதவி என்பது அங்கிருந்த பணியாளர்களுக்கு மத்தியில் எத்தகையை தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த மனிதன் ஏன் அந்த உதவியை செய்தான். அவனும் மனிதன் தானே ஏன் சல்லிப்பயலாக நடந்துகொள்ளாமல், அந்தந்த நேரத்து நியாயங்களின் அடிப்படையில் நல்லவனாக நடந்துகொண்டான் என அதன் பின்னணியை முழுமையாக இங்கு தெரிந்துகொள்ளலாம்.

மேலும் படிக்க | ரஷ்யா: அலெக்சி நவாலினியின் உடலில் காயங்கள் - இது கொலை என உறவினர்கள் புகார்

அமெரிக்காவின் மிச்சிகன் நகரில் உள்ள மேசன் ஜார் கேப் (Mason Jar Cafe) என்ற உணவகத்தில் மார்க் என்ற வாடிக்கையாளர் சில தினங்களுக்கு முன் உணவருந்த சென்றிருக்கிறார். அவர் மொத்தம் 32.43 அமெரிக்க டாலருக்கு உணவருந்தியுள்ளார். உணவகம் அவருக்கு அளித்த பில்லில் டிப்ஸ் பகுதியில் 10 ஆயிரம் அமெரிக்க டாலர் என்று எழுதியுள்ளார். அவர் சாப்பிட்ட தொகையில் இருந்து அவர் டிப்ஸ் கொடுத்த தொகை 30,835% அதிகம். அதாவது இந்திய மதிப்பில் மைக் 2 ஆயிரத்து 691 ரூபாய்க்கு சாப்பிட்டுள்ளார். ஆனால் 8 லட்சத்து 29 ஆயிரத்து 883 ரூபாயை டிப்ஸாக வழங்கி உள்ளார். 

11 பங்குகளும்... 11 வாழ்க்கைகளும்...

இது அந்த உணவகத்தின் பணியாளர்களுக்கு மிகுந்த அதிர்ச்சி கலந்த உற்சாகத்தை நிலைக்கு சென்றுள்ளனர். அவர்களால் அந்த மகிழ்ச்சியை வார்த்தையால் சொல்லவே முடியவில்லை. அந்த மொத்த தொகையையும் 11 பங்காக பிரித்து பணியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. அதாவது ஒவ்வொருவருக்கும் தலா 1,100 அமெரிக்க டாலர்கள் (ரூ.91,285) கொடுக்கப்பட்டது. ஒவ்வொருவரும் தங்களின் அடக்க முடியாத மகிழ்ச்சியை உள்ளூர் ஊடகங்களிடம் பகிர்ந்துகொண்டுள்ளனர். 

குறிப்பாக, அந்த வாடிக்கையாளருக்கு உணவு பரிமாறியதாக கூறப்படும் பைஜ் முலிக் உள்ளூர் ஊடகத்திடம் கூறுகையில்,"இது உண்மையில் பலர் மீதும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு கருணை மிகுந்த செயல். இதன்மூலம் எனது கல்விக்கடனில் உள்ள வட்டியை முடிந்தளவு குறைப்பேன். சமீபத்தில் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில்தான் பட்டப்படிப்பை முடித்தேன். 

சிறியதோ, பெரியதோ...

இந்த சம்பவம் நடந்த அந்த நாளில் பல பெண்கள் வேலை செய்தார்கள், பல கடின உழைப்பாளிகளான தாய்மார்கள் அதில் இருந்தனர். இதற்கு (டிப்ஸ்) தகுதியானவர்கள் அவர்கள்... ஒவ்வொரு டாலரும் இது போன்ற ஒரு வேலையில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். நாங்கள் கடினமாக உழைக்கிறோம், சில நாட்களில் நீங்கள் அதிகமாகவும், சில நாட்களில் நீங்கள் குறைவாகவும் சம்பாதிப்போம்" என தங்களது நிலையை எடுத்துரைத்தார்.

"எந்த நேரத்திலும் நீங்கள் கைகொடுத்து ஒருவரின் வாழ்க்கையை மாற்ற முடியும், அது ஒரு சிறிய செயலாக இருக்கலாம், பெரிய செயலாகவும் இருக்கலாம். ஆனால், அந்த செயலை செய்வதுதான் முக்கியம், அதை மனதில் வைக்க வேண்டும்" என்றும் முலிக் இந்த சம்பவத்தை விவரித்தார். இதுகுறித்து, உணவகத்தின் மேலாளர் டிம் ஸ்வீனி கூறுகையில்,"15% - 25% வரை டிப்ஸ் வரும். ஆனால், இது பெரிய தொகை. எப்போதாவது ஒரு 100 டாலர் வரை டிப்ஸ் வரும் அவ்வளவுதான். ஆனால் இந்தளவிற்கு இவ்வளவு பெரிய தொகை வந்ததே இல்லை" என்றார். 

டிப்ஸ் கொடுத்ததன் காரணம்...

மேலும், "முதலில் பார்க்கும்போது நான் நம்பவில்லை. மீண்டும் மீண்டும் பார்த்தேன். அவரிடம் இதுகுறித்து கேட்டேன். அவரும்,'ஆம், வைத்துக்கொள்ளுங்கள்' என்றார்" என மேலாளர் அந்த சம்பவத்தை விவரித்தார். எதற்கு இவ்வளவு பெரிய தொகையை மைக் அளித்தார் என்ற காரணத்தையும் அவர் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். 

முலிக் இதுகுறித்து கூறுகையில்,"இந்த டிப்ஸ் சமீபத்தில் மறைந்த தனது நண்பரின் நினைவாக கொடுக்கிறேன் என்றும் அவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்கவே தற்போது இங்கு வந்திருப்பதாகவும் மைக் கூறினார்" என்றார். ஆம், மைக் அவரது வாழ்க்கையின் சில பகுதிகளில் சல்லிப்பயலாக கூட இருந்திருக்கலாம், ஆனால் இப்போது அவர் பலருக்கும் தெய்வத்திற்கு சமமானவர். எனவே, வாழ்க்கை அந்தந்த நேரத்து நியாயம்தான் என்பதே நியாயமான வாதமாக இருக்கும் என நினைக்கிறேன்.

மேலும் படிக்க | ரஷ்யாவின் கொடூரமான சிறை கூடங்கள்... தினமும் 16 மணிநேர சித்திரவதை..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News