காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வெடித்து உள்ளது. தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பாக ஆங்காங்கே சாலை மறியல், ரெயில் மறியல் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இதனால் தமிழகம் போராட்டக்களமாக மாறி இருப்பதால் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், சென்னை அண்ணா சாலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கி. வீரமணி, திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் மறியலில் பங்கேற்றுள்ளனர். பின்னர் அவர்கள் மெரினா கடற்கரையை நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது, அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். 


இதனால் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின், கி.வீரமணி, திருநாவுக்கரசர், திருமாவளவன், ஜவாஹிருல்லா ஆகியோரை கைது செய்தனர். கைது செய்வதற்காக ஸ்டாலினை குண்டுக்கட்டமாக தூக்கிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


முன்னதாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக இன்று (ஏப்ரல் 5-ம் தேதி) தமிழகம் தழுவிய பொது வேலைநிறுத்தம் போராட்டம் எதிர்கட்சி அழைப்பு விடுத்திருந்தது. இந்த போராட்டத்திற்கு தமிழக அரசு பேருந்து ஊழியர்கள் ஆதரவு தெரிவித்திருந்தது.


அதேபோல தமிழகத்தைச் சேர்ந்த 15 போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் 90 சதவிகிதம் போக்குவரத்து முடங்கியுள்ளது.


மேலும், இன்று காலை 6 மணி முதல் கடைகள் மூடப்பட்டன. குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்பட்டன. மற்ற மாநில பேருந்துகளும் தமிழக எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. 5-ஆவது நாளாக திமுக மறியல் போராட்டம் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்ககது.