'நீட் தேர்வே தேவையில்லை... மாநில உரிமையும் முக்கியம்' பாஜகவை சீண்டுகிறாரா விஜய்...?

TVK President Vijay Speech: நீட் தேர்வால் தமிழ்நாட்டு மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை என்றும் நீட் விவகாரம் மாநில உரிமையை பறிப்பதாக அமைக்கிறது என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசியுள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Jul 3, 2024, 11:03 AM IST
'நீட் தேர்வே தேவையில்லை... மாநில உரிமையும் முக்கியம்' பாஜகவை சீண்டுகிறாரா விஜய்...?  title=

TVK President Vijay Speech: கடந்த 2023-24 கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவ-மாணவியர்களை தொகுதிவாரியாக தேர்வு செய்து அவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் விருது வழங்குகிறார். சென்னை திருவான்மியூரில் கடந்த ஜூன் 28ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்ட நிகழ்ச்சியில் பல மாணவ மாணவியருக்கு விருது வழங்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட நிகழ்வு இன்று (ஜூன் 3) நடைபெறுகிறது. 

கடந்தாண்டும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், இரவு வரை காத்திருந்து விஜய் ஒவ்வொருவருக்கும் பரிசுகளை கொடுத்தார். இந்த முறை அந்த பிரச்னையை தவிர்க்கவே இரு கட்டங்களாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்தாண்டு பிப்ரவரியில் நடிகர் விஜய் அவரது தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி பிறகு அவர் பங்கேற்கும் முதல் பொது நிகழ்வு என்பதால் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. 

கடந்த ஜூன் 28ஆம் தேதி நிகழ்வில் பேசியபோது, கள்ளக்குறிச்சி விவகாரம், போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு என பல்வேறு விஷயங்களை நடிகர் விஜய் குறிப்பிட்டிருந்தார். மேலும் அடுத்த சந்திப்பில் வேறு ஏதும் பேசப்போவதில்லை என்றும் கூறினார். அந்த வகையில் இன்று விஜய் பேசமாட்டார் என கூறப்பட்டு வந்த நிலையில், முக்கிய விவகாரம் ஒன்று குறித்து பேசப்போகிறார் என நிகழ்ச்சி தொடங்கும் சில நிமிடங்களுக்கு முன்னர் தகவல்கள் கசிந்தன. 

அதை தொடர்ந்து, இன்று காலை 10 மணியளவில் நிகழ்ச்சியின் மேடைக்கு வந்த அவர் அனைவருக்கும் வணக்கம் வைத்துவிட்டு, முதல் வரிசையில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளி மாணவி மற்றும் திருநங்கை மாணவி ஆகியோருக்கு இடையில் நடிகர் விஜய் சென்று அமர்ந்து அவர்களிடம் சற்று நேரம் உரையாடினார். பின்னர் மாணவ-மாணவியர் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட அனைவருக்கு வணக்கம் கூறிய விஜய் தமிழ் தாய் வாழ்த்து பாடிய பின்னர் மேடை ஏறினார். 

மேலும் படிக்க | “பொய் பிரச்சாரம்” திமுக-வை கலாய்த்தாரா விஜய்?!

நீட் விவகாரம்: வாய் திறந்தார் விஜய்...

அதை தொடர்ந்து, இன்று காலை 10 மணியளவில் நிகழ்ச்சியின் மேடைக்கு வந்த அவர் அனைவருக்கும் வணக்கம் வைத்துவிட்டு, முதல் வரிசையில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளி மாணவி மற்றும் திருநங்கை மாணவி ஆகியோருக்கு இடையில் நடிகர் விஜய் சென்று அமர்ந்து அவர்களிடம் சற்று நேரம் உரையாடினார். பின்னர் மாணவ-மாணவியர் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட அனைவருக்கு வணக்கம் கூறிய விஜய் தமிழ் தாய் வாழ்த்து பாடிய பின்னர் மேடை ஏறினார். 

விழா மேடையில் பேசிய விஜய்,"இன்று ஏதும் பேச வேண்டாம் என நினைத்திருந்தேன். ஒரு முக்கியமான விஷயம் குறித்து பேசவில்லை என்றால் அது சரியாக இருக்காது. அது நீட் தேர்வு குறித்துதான். நீட் தேர்வால் கிராம புற மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்த மாணவ மாணவிகள் அனைவரும் ரொம்பவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே சத்தியமான உண்மை.  

விஜய் பேச்சு - வீடியோ

நீட் தேர்வால் மூன்று பிரச்னைகள்

இந்த நீட் தேர்வால் மூன்று பிரச்னைகள் இருக்கிறது. ஒன்று மாநில உரிமைக்கு இது எதிரானதாக இருக்கிறது. 1975ஆம் ஆண்டுக்கு முன் கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தது, அதன்பின்னர்தான் ஒன்றிய அரசு அதனை பொதுப் பட்டியலுக்கு கொண்டு வந்தது. இதுதான் முதல் பிரச்னை. இரண்டாவது, ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் ஒரே தேர்வு என்பதும் ஒரு பிரச்னை. இது கல்வி கற்கும் நோக்கத்திற்கு எதிரான விஷயம். மாநிலத்திற்கும் ஏற்ற பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும். இது மாநில உரிமை சார்ந்த மட்டுமில்லை, கல்விமுறையிலும், பாடத்திட்டங்களிலும் பல்வேறு கண்ணோட்டங்கள், பல்வேறு பார்வைகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காக இதை சொல்கிறேன்.

பன்முகத்தன்மை பலமே தவிர பலவீனம் கிடையாது. மாநில கல்வி திட்டத்தில் படித்துவிட்டு தேசிய கல்வித் திட்டத்தில் தேர்வு எழுதுவது எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். அது கடினமானது. தற்பொழுது நடைபெற்ற நீட் தேர்வில் பல குளறுபடிகள் ஏற்பட்டதை பார்த்தோம். நீட் தேர்வு மீது கொண்ட நம்பகத்தன்மை போய்விட்டது. நீட் தேர்வு தேவை இல்லை என்பது புரிந்து கொண்ட விஷயம். 

நிரந்திர தீர்வு நீட் விலக்கு 

இதற்கு நிரந்திர தீர்வு, நீட் விலக்குதான். நீட் தேர்வை ரத்து செய்ய தற்போது தமிழ்நாடு அரசு இயற்றிய நீட் தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஒன்றிய அரசு காலதாமதம் செய்யாமல், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஒன்றிய அரசு நிரந்தர தீர்வை கொடுக்க வேண்டும். இதற்கான நிரந்தர தீர்வு கல்வியை பொதுப் பட்டியிலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும்.

இடைக்கால தீர்வு... 

இதில் சிக்கல் இருந்தால் இடைக்கால தீர்வாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி சிறப்பு பொதுப் பட்டியலை உருவாக்கி கல்வி மற்றும் சுகாதாரத்தை சேர்க்க வேண்டும். தற்போதைய பொதுப்பட்டியலை பார்த்தோமானால் அது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதே தவிர மாநில அரசுகளுக்கு அதில் ஏதுமில்லை. எனவே மாநில அரசுக்கு முழு சுதந்திரத்தை தர வேண்டும். 

இது என்னுடைய பரிந்துரைதான். இதை உடனடியாக நடக்குமா, உடனே உடனே நடக்காது என்றும் தெரியும், அப்படியே நடந்தாலும் அதனை நடக்கவிட மாட்டார்கள் என்றும் தெரியும். இந்த சந்தர்பத்தில் என பரிந்துரையை வழங்க வேண்டும் என நினைத்தேன். இதுவே நீட் குறித்த எனது தனிப்பட்ட கருத்து" என்றார். மேலும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசிய விஜய்,'வெற்றி நிச்சயம்... வெற்றி நிச்சயம்...' என கூறி தனது உரையை முடித்தார். 

சென்ற விழாவில் விஜய் அரசியல் குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது பேச்சு ஏமாற்றத்தை கொடுத்தது. குறிப்பாக அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் அரசியல் மற்றும் அன்றைய சூழ்நிலையில் நீட் குறித்து பேசாதது குறித்தும் பலவித கருத்துக்கள் சமூக வலைதளத்தில் பேச்சு பொருளானது. அந்த வகையில், இரண்டாம் கட்ட விழாவில் பேசப்போவதில்லை என்று தெரிவித்திருந்த நடிகர் விஜய் இன்று மீண்டும் பேசினார். குறிப்பாக நீட் தேர்வு குறித்து அவர் பேசி இருக்கக்கூடிய இந்த கருத்து முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மத்திய அரசை திமுக அழைப்பது போல் 'ஒன்றிய அரசு' என குறிப்பிட்டு பேசியிருக்கிறார். இது பாஜகவுக்கு எதிரான அரசியலை முன்னெடுக்கிறார் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது. 

 

மேலும் படிக்க | நுழைவுத்தேர்வுகளுக்கான வடிவத்தை மாற்றிய NTA! புதிய தேர்வு தேதிகள் அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News