துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை, பிரேத பரிசோதனை முடிந்த பிறகு மறுஉத்தரவு வரும் வரை பதப்படுத்தி வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தங்கள் உரிமைக்காகவும், தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனக்கூறி அமைதி பேரணியாக பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி சென்றனர். 


அப்பொழுது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியாதால், போலீஸ் மற்றும் பொது மக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் மோதலாக மாறியது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் 10 உயிரிழந்துள்ளனர். 


இதை தொடர்ந்து, இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். 3-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். 


இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இதை தொடர்ந்து தற்போது விசாரணைக்கு வந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை, பிரேத பரிசோதனை முடிந்த பிறகு மறுஉத்தரவு வரும் வரை பதப்படுத்தி வைக்க வேண்டும். பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் மறு ஆய்வு குறித்து முடிவு செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.