சீக்கிய மதத்தை நிறுவிய குரு நானக் தேவின் 550-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பாகிஸ்தான் அரசு நினைவு நாணயத்தை வெளியிட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாக்கிஸ்தான் ரூபாய் (PKR) 50 மதிப்புள்ள இந்த நாணயம் கர்தார்பூர் சாஹிப்பில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் பயண யாத்ரீகர்களுக்கு PKR 8 மதிப்புள்ள அஞ்சல் முத்திரைகளும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில், பாகிஸ்தானில் உள்ள கர்த்தார்பூர் நடைபாதை வழியாக குருத்வாரா கர்த்தார்பூர் சாஹிப்பிற்கு தொடக்க `ஜாதா'வில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்ட 575 யாத்ரீகர்களின் பட்டியலை இந்தியா செவ்வாய்க்கிழமை பகிர்ந்து கொண்டது. அந்த பட்டியலில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அமைச்சர் ஹர்சிம்பத் கவுர், பஞ்சாப் முதலமைச்சர் அமரேந்தர் சிங், பஞ்சாப் எம்பி-க்கள், எம்,எல்.ஏக்கள் உட்பட மொத்தம் 575 நபர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் முதல் யாத்ரீகர்கள் குழு நவம்பர் 9-ஆம் தேதி அண்டை நாட்டிற்கு புறப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கர்தார்பூர் சாஹிப் தாழ்வாரத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இந்தியா அக்டோபர் 24-ஆம் தேதி பாகிஸ்தானுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன்படி, அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த வழித்தடத்தின் மூலம் இந்தியர்கள் விசா இல்லாமல் கர்தார்பூர் சென்று வரலாம். அதன்பின், பரஸ்பர உடன்பாட்டின் பேரில் இது மேலும் நீட்டிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. 


குரு நானக் தேவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த பாதை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதை இந்தியாவின் குர்தாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் சன்னதியை பாகிஸ்தானின் கர்த்தார்பூரில் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாராவுடன் இணைக்கிறது.


முன்னதாக, பாகிஸ்தானில் குரு நானக் தேவ் சன்னதி குருத்வாரா தர்பார் சாஹிப்பைப் பார்வையிடும் ஒவ்வொரு இந்தியருக்கும் இஸ்லாமாபாத் 20 அமெரிக்க டாலர் சேவை கட்டணமாக வசூலிக்கும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.