நாடாளுமன்ற மாநிலங்களவை அ.தி.மு.க. உறுப்பினர் முத்துக்கருப்பன் திருநெல்வேலியை சேர்ந்தவர். இவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியுள்ளது. இவரது பதவிக்காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் இவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப்போவதாக சனிக்கிழமை அதவாது 30-ம் தேதி தெரிவித்திருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி, அவர் இன்று தனது ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவிடம் அளிக்க உள்ளதாக அ.தி.மு.க எம்.பி முத்துக்கருப்பன் தெரிவித்தார். 


டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக எம்.பி முத்துக்கருப்பன் கூறியதாவது:- “காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து காலம் தாழ்த்துவது மனவேதனை அளிக்கிறது முதலமைச்சர், துணை முதலமைச்சர் சமாதானம் செய்வார்கள் என தொலைபேசியை அணைத்து வைத்து விட்டேன். 


கடுமையான சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு தீர்ப்பு கிடைத்த பிறகும் தாமதப்படுத்துகின்றனர். தமிழகத்துக்கு தண்ணீர் கொடுப்பதில் செய்யப்படும் அநீதியை மனம் ஏற்கவில்லை. ராஜினாமா கடிதத்தை, காலை 10.45 மணிக்கு, மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவிடம் அளிக்க உள்ளேன்” என்று கூறியிருந்தார். 


இதை தொடர்ந்து, மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் முத்துக்கருப்பனின் ராஜினாமா கடிதத்தை ஏற்க வெங்கய்யா நாயுடு மறுத்துவிட்டார். அது மட்டுமின்றி உடல்நிலை சரியில்லை, சொந்த காரணங்கள் என குறிப்பிடப்படும் ராஜினாமா கடிதம் மட்டுமே ஏற்கப்படும் எனவும் அரசியல் காராணங்களை குறிப்பிட்டு கடிதம் அளித்தால் ஏற்கக் கூடாது என்பது மரபு எனவும் தெரிவித்தார்.