நடந்து முடிந்த வேலூர் மக்களவை தேர்தலில் 72% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் அதிகாரி சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் நடைப்பெற்ற போது, பணப்பட்டுவாடா குற்றச்சாட்டு காரணாக வேலூர் மக்களவை தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கு இன்று தேர்தல நடத்தப்பட்டது.


இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர். பல வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் ஏ.சி.சண்முகத்துக்கும், கதிர் ஆனந்துக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.


இதனையடுத்து வேலூர் மக்களவை தொகுதியில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு சரியாக மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. காலையில் மந்தமாக இருந்த வாக்குபதிவு மதியத்திற்கு பின் விறுவிறுப்படைந்தது. இந்நிலையில் வேலூர் மக்களவை தேர்தலில் மொத்தமாக 72% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.


கடந்த இரு  மக்களவை தேர்தல்களை விட இது 4% வாக்குப்பதிவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை வரும் 9-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.