கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களை வீழ்த்திய காங்கிரஸ் வேட்பாளர் வசந்த குமார் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பாக கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டவர் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார். இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை விட  2,59,933 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி வாகை சூடினார்.


இதன் காரணமாக இவர் தான் வகித்து வரும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 


இதனால் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.


இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற பின்னர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து சட்டத்துறை நிர்வாகிகளுடன் வசந்தகுமார் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வசந்தகுமார், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன். தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் நேரம் ஒதுக்கினால் இன்று ராஜினாமா கடிதம் கொடுக்க உள்ளேன். 
இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ஆகியோரிடம் பேசி, அவர்கள் ஆலோசனைப்படி இந்த முடிவை எடுத்துள்ளேன் என தெரிவித்தார்.


கடந்த 2016-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஹெச். வசந்தகுமார் என்பது குறிப்பிடத்தக்கது