கர்நாடகாவின் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் மும்பையில் உள்ள சோபிடெல் ஓட்டலில் தங்க வைப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகத்தில் முதல் மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி ஆட்சிக்கு நியமன எம்.எல்.ஏ. உள்பட 225 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் 120 பேரின் ஆதரவு இருந்து வருகிறது. இவர்களில் மந்திரி பதவி கிடைக்காமல் 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர்.


கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் பத்து அதிருப்தி எம்.எல்.ஏக்களும், மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்தனர். இதனால் சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை இழந்த குமாரசாமி தலைமையிலான அரசு கவிழும் நிலை உருவாகியுள்ளது. அதிருப்தியாளர் எம்.எல்.ஏக்கள் கர்நாடக ஆளுநர் வாஜூபாய் வாலாவை பெங்களூர் ராஜ்பவனில் சந்தித்து அரசுக்கு தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வதாக தெரிவித்தனர்.ஆயினும் ராஜினாமாக்களை சபாநாயகர் இன்னும் ஏற்காத நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மும்பைக்கு சென்று அங்கு அவர்கள் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


அதிருப்தி எம்.எல்.ஏக்களிடம் ராஜினாமா முடிவைத் திரும்பப் பெறும்படி சமாதானப் பேச்சுவார்த்தைகளில் காங்கிரஸ்-மதசார்பற்ற கட்சிகளின் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றுக் கொண்டால் 13 எம்.எல்.ஏக்களுடன், ஏற்கனவே ராஜினாமா செய்த ஆனந்த்சிங்குடன் சேர்த்து 14 எம்.எல்.ஏக்களின் ஆதரவு குறைவதால், ஆளும் கூட்டணிக்கு தேவையான பெரும்பான்மை பலம் குறைந்துவிடும். பாஜக 105 இடங்கள் கொண்டிருக்கும் நிலையில் காங்கிரஸ் கூட்டணிக்கும் பாஜகவுக்கும் சமபலம் உருவாகும்.


வரும் 12 ஆம் தேதி சட்டமன்றம் தொடங்க உள்ள நிலையில் பாஜக ஆட்சியை அமைக்க முயற்சி மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனிடையே தமது அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று பெங்களூர் திரும்ப உள்ள கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஆட்சி கவிழும் முன்பே, அனுதாபத்தைப் பெற ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இந்நிலையில், கர்நாடக காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் மும்பையில் உள்ள சோபிடெல் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் தங்களது பதவியை இன்னும் ஓரிரு நாட்களில் ராஜினாமா செய்யலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளதால், குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 



வரும் 12 ஆம் தேதி கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் 11 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.