கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக நிபா எனும் அரிய வகை வைரஸ் மக்களிடையே பரவி வருகிறது. இந்த வைரஸ் மூலம் பரவும் நோயை எவ்வாறு குணப்படுத்துவது என்று தெரியாமல் மருத்துவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிபா வைரஸ் தாக்கி கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் பகுதிகளில் ஒரு செவிலியர் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது, கேரளாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும், சிகிச்சைக்கு வரும் அனைவரிடமும் இந்த நிஃபா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று சோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், கேரளா தமிழக எல்லை பகுதிகளிலும் இது தொடர்பாக தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 


தற்போது, தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நிபா வைரஸ் தேனி மாவட்டம் வழியாக தமிழகத்துக்குள் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே, மருத்துவக் குழுவினருக்கு, லோயர்கேம்ப், கம்பம்மெட்டு ஆகிய இடங்களில், நிரந்தர முகாம்களை மாவட்ட நிர்வாகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கர்..! 


கேரளாவில் வேகமாக பரவி வரும் நிபா வைரஸ் தொற்று தமிழகத்தில் பரவ வாய்ப்பில்லை கேரளாவிலேயே அது கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. எனினும், கவனமாக இருப்பது நல்லது. மேலும், திருச்சியில் அனுமதிக்கப்பட்ட 2 பேருக்கும் இருப்பது சாதாரண காய்ச்சலே என்பதும் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.