நம் வாழ்க்கை முறையின் மாற்றங்களாலும், உணவு முறை பழக்கத்தாலும் இதுவரை கண்டுபிடிக்க முடியாத விஷயங்களால் கூட அவதிப்பட்டு வருகின்றோம். அப்படி, உலகளவில் பெரும்பாலான மக்கள் அவதிப்பட்டு வரும் பாதிப்புகளுள் ஒன்று, முதுகு வலி. இந்த வலி ஏற்பட்டால், அமர முடியாது, நடக்க முடியாது, பிடித்தது போல் மெத்தையில் திரும்பி படுக்க முடியாது. இப்படி, நாளுக்கு நாள் நமது வாழ்க்கையில் அசௌகரியத்தை ஏற்படுத்தும் முதுகுவலியில் இருந்து விடுபடுவது எப்படி? இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

என்னதான் தீர்வு?


முதுகுவலி பிரச்சனையில் இருந்து விடுபட, சமீபத்தில் ஒரு மருத்துவ ஆய்வில் தீர்வு ஒன்று கொடுக்கப்பட்டிருக்கிறது. அது வேறு ஒன்றுமில்லை, நாம் எளிதாக செய்யக்கூடிய நடைப்பயிற்சிதான். நடைப்பயிற்சியால் என்னென்ன பயன்கள் என்பது நாம் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. 


நடைப்பயிற்சி:


உடல் எடையை குறைப்பதில் இருந்து, உடலுக்கு ஆற்றல் கொடுப்பது வரை, பல்வேறு மேஜிக் நன்மைகளை தருகிறது நடைப்பயிற்சி. கொழுப்பை எரிக்க, கால்கள் வலுவாக, சர்க்கரை அளவை கட்டுப்படுத்த என பல்வேறு காரணங்களுக்காக நாம் நடைப்பயிற்சியை மேற்கொள்கிறோம். இது, முதுகு வலிக்கும் பயணுள்ளதாக இருக்கும். அது மட்டுமன்றி, ஒட்டுமொத்த உடல் நலனையும் கூட பாதுகாக்கும். 


முதுகு வலி என்பது, வயது வித்தியாசமின்றி யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். உலக சுகாதார மையத்தின் ஆய்வின் படி, உலகில் 60 முதல் 70 சதவிகிதம் பேர் இதனால் அவதிப்படுகின்றனராம். சரியான தோரணையில் (Posture) அமராதவர்கள், ஆரோக்கியமான வாழ்க்கை முறை இல்லாதவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனராம். அது மட்டுமன்றி, நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்படுபவர்கள், அறுவை சிகிச்சை செய்தவர்கள் என பலருக்கும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. 


நடைப்பயிற்சி, முதுகு வலியை நீக்க எப்படி உதவுகிறது?


ரத்த ஓட்டம்:


நடைப்பயிற்சியின் முக்கியமான பயன்களுள் ஒன்று, ரத்த ஓட்டம். நடைப்பயிற்சி செய்கையில் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. தினமும் நடைபயிற்சி செய்வதால் நம் முதுகுத்தண்டிற்கும் ரத்தம் பாய்கிறதாம். இது குறித்து வெளியாகியுள்ள ஒரு பிரபல பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆய்வில், நடைப்பயிற்சி செய்பவர்களின் உடலில் நல்ல ஆக்ஸிஜன் அளவு இருப்பதாகவும், இதனால் அவர்களின் திசுக்கள் சேதமடையாமல் பாதுகாக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


தசைகளை வலுப்படுத்தும்:


நடைப்பயிற்சி செய்கையில், நம் உடல் தசைகள் அனைத்தையும் உபயோகிக்க வேண்டியிருக்கும். குறிப்பாக, கீழ் உடல் தசைகள் (Lower Body). இவைதான், நமது முதுகெலும்பை தாங்கி பிடிப்பவையாக இருக்கின்றன. எனவே, நடைப்பயிற்சி செய்து, கீழ் உடல் தசைகளை வலுப்படுத்தி, தேவையற்ற தசைகளை குறைத்தால் முதுகு வலி குறையும் என்று மருத்துவர்களால் கூறப்படுகிறது. 


மன நலனுக்கு நல்லது..


நாள்பட்ட முதுகு வலியால் அவதிப்படுவோர், பெரும்பாலான சமயங்களில் மன அழுத்தம் மற்றும் மனபதற்றத்தால் பாதிக்கப்படுபவர்களாக இருக்கின்றனர். இது, அவர்களுக்கு தாங்க முடியாத முதுகு வலியை உண்டாக்கலாம். ஆனால், நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களின் மனநலன், நடைப்பயிற்சி செய்யாதவர்களை விட நன்றாக இருப்பதாக ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. எனவே, தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சி என்ற விகிதத்தில், ஒரு வாரத்திற்கு 5 நாட்கள் இதனை மேற்கொள்ளலாம். இதனால், மன அழுத்தம் மற்றும் உடற்சோர்வு நீங்கும். 


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE Media இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)