டெல்லி மேற்கு தொகுதியில் போட்டியிட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.6 கோடி வழங்கியதாக ஆம் ஆத்மி வேட்பாளர் மகன் தெரிவித்துள்ளார்; ஆனால் மகனின் குற்றச்சாட்டை ஆம் ஆத்மி வேட்பாளர் மறுத்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லோக் ஆயுக்தா மற்றும் லோக்பால் மசோதாவை அமல்படுத்தக் கோரி அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்தில் உருவான ஆம் ஆத்மி கட்சி, ஊழலுக்கு எதிரான கட்சியாக உருவெடுத்தது. 


பின்னர் டெல்லி சட்டசபையில் போட்டியிட்ட அக்கட்சி 2013-ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்தது. ஆம் ஆத்மி கட்சி தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக பதவியேற்றார்.


தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நாளை டெல்லியில் நடைபெறவுள்ள நிலையில்., ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி மேற்கு பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் பல்பீர் சிங் ஜாகரின் மகன் உதய் ஜாகர் தனது தந்தைக்கு சீட் வழங்க ரூபாய் 6 கோடி லஞ்சம் அளித்ததாக தெரிவித்துள்ளார்.


டெல்லி செய்தியாளர்களிடன் இதுகுறித்து தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்., பாராளுமன்ற தேர்தலில் டெல்லி மேற்கு தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளராக எனது தந்தை பல்பீர் சிங் ஜாகர் போட்டியிடுகிறார். எனது தந்தை கட்சியில் சேர்ந்து 3 மாதங்கள் தான் ஆகிறது. அங்கு போட்டியிட ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லியின் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.6 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு நானே சாட்சி என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.


நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளரின் மகன் இப்படி பகிரங்கமாக பேட்டியளித்தது தலைநகர் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் தனது மகனது குற்றச்சாட்டை அவரது தந்தை மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.