இந்திய அணியில் இடம்பெற்றுள்ள முக்கிய வீரரின் மனைவி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர், வரும் மே 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்க இருக்கும் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இவரது மனைவி ஹசின் ஜஹான்.


கடந்த 2018 ஆம் ஆண்டு, ஷமி மீது அவரது மனைவி பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார். பல பெண்களுடன் ஷமிக்கு தொடர்பு, கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்பு, வரதட்சணை கொடுமை உள்ளிட்ட ஏராளமான புகார்களை கூறியிருந்தார். பின்னர், சூதாட்டத்தில் ஷமி ஈடுபடவில்லை என்பதை BCCI உறுதிசெய்து அணியில் இடம் கொடுத்தது. ஷமி மீதான வழக்கு கொல்கத்தா காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹா பகுதியில் உள்ள ஷமி வீட்டிற்குள் ஹசின் ஜஹான் அத்துமீறி நுழைந்துள்ளார். அத்துடன், ஷமியின் தாயாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.


இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், ஹசின் ஜஹானை கைது செய்தனர். கைது ஆணை இல்லாமல் 24 மணி நேரம் வரை காவலில் வைத்திருக்கலாம் என்ற 151-வது பிரிவின்கீழ் இவர் கைது செய்யப்பட்டிருந்தார். காவல்நிலையத்தில் இருந்து வெளியே வந்த ஹசின் ஜஹான், ஷமியின் பண பலத்தால் இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.