பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய தாக்குதலில் வெற்றி பெற்றுள்ளதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மான்செஸ்டரில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் களம் இறங்கிய லோகேஷ் ராகுல், ரோஹித் சர்மா ஜோடி ரன்களைக் குவித்தது. 57 ரன்களில் ராகுல் ஆட்டமிழந்த நிலையில், ரோஹித் சர்மா தொடர்ந்து அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.


விராட் கோலி- ரோஹித் சர்மா ஜோடி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தியபோது 47வது ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. கோலி 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்களைக் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் அமீர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் ஃபகார் ஜமான் 62 ரன்களும், பாபர் ஆசம் 48 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆயினும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தடுமாறியது. 35 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் இரண்டாவது முறையாக மழை குறுக்கிட்டு ஆட்டம் பாதிக்கப்பட்டது. 


இதையடுத்து, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டு, பாகிஸ்தானுக்கு 302 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இமாத் வாசிம் 46 ரன்களும், சதாப்கான் 20 ரன்களும் சேர்த்தனர். 40 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 



உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இது குறித்து தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா. பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதலில் வெற்றி கிடைத்துள்ளது. அதற்கு சிறப்பாக விளையாடிய இந்திய அணிக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த சிறப்பான வெற்றியை ஒவ்வொரு இந்தியரும் பெருமையுடன் கொண்டாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில், #CWC2019-ல் பாக்கிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகள். இந்திய அணி இந்த வெற்றிக்கான ஒரு அற்புதமான கிரிக்கெட் விளையாட்டாக விளையாடியது. டீம் இந்தியா குறித்து நாம் அனைவரும் பெருமைப்படுகிறோம்" என குறிப்பிட்டுள்ளார். 



ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட், ஆம் ஆத்மி கட்சி, ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்திஆகியோர் தங்களின் வாழ்த்துக்களை இந்திய கிரிக்கெட் அணிக்கு தெரிவித்துள்ளனர். 


உலக கோப்பையில் இதுவரை பாகிஸ்தானுடன் மோதிய 7 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று சாதனையை தக்க வைத்து கொண்டது குறிப்பிடத்தக்கது.