பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் ஆட்சியமைந்தால், இந்தியாவுடனான அமைதிப்பேச்சு வார்த்தைக்கு சிறந்த வாய்ப்பாக அமையும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பன்னாட்டு பத்திரிக்கையாளர்கள் குழு ஒன்றுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால், காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் குழப்பம் ஏற்படும் என்று தெரிவித்தார். இந்தியாவில் இருப்பதை மகிழ்ச்சியாக கருதிய இஸ்லாமியர்கள் தற்போது இந்துத்துவத்தால் கவலையடைந்துள்ளதாகவும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்; “வரும் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தால் காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண அக்கட்சி பயப்படும். ஆனால் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் ஒரு சில தீர்வுகளாவது காஷ்மீருக்கு கிடைக்கும். இந்தியாவில் முஸ்லீம்களுக்கு நடக்கும் கொடுமையை நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஒரு காலத்தில் முஸ்லீம்கள் இந்தியாவில் தங்கள் சூழ்நிலை நன்றாக இருந்தது குறித்து மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் தற்போது இந்துத்துவா கொள்கைகளினால் அவர்கள் கவலையில் உள்ளனர். பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளை ஒழிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். 


காஷ்மீரில் நிலவும் பிரச்சனை அரசியல் போராட்டம், அங்கு ராணுவத்தால் தீர்வு காண முடியாது. புல்வாமா தாக்குதலுக்கு பிறகு மோடி தலைமையிலான பாஜகவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. அடுத்த சில வாரங்களில் கருத்துக்கணிப்பு மோடிக்கு எதிராக திரும்பினால், இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக தாக்குதல் நடத்த சாத்தியக்கூறு உள்ளது” என்று தெரிவித்தார்.