மத்திய அரசை கண்டித்து 10 தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. இதை 10 மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., சி.ஐ.டி.யு., தொ.மு.ச. உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டன. 


கடந்த 2-ஆம் தேதி தொழிற்சங்க தலைவர்கள் வேலைநிறுத்த நோட்டீசை அளித்ததும் மத்திய தொழிலாளர் அமைச்சகம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ஆனால் அதில் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து எந்த உறுதியும் அளிக்கவில்லை. 


தொழிலாளர் மாநாடு இறுதியாக 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. அதன்பின்னர் 2015 ஆகஸ்டு மாதத்தில் தொழிலாளர்களின் 12 அம்ச கோரிக்கைகள் பற்றி பேசுவதற்காக மத்திய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. இதுவரை அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


தேசநலனுக்கும், வளர்ச்சிக்கும் விரோதமாக பொதுத்துறை நிறுவனங்கள், இயற்கை வளங்கள் மற்றும் பிற தேசிய சொத்துகளை தனியார்மயமாக்குவதிலும், விற்பதிலும் அரசு தீவிர கவனம் செலுத்திவருகிறது. 12 விமான நிலையங்கள் ஏற்கனவே தனியாருக்கு விற்கப்பட்டுவிட்டது. பி.எஸ்.என்.எல்.-எம்.டி.என்.எல். இணைப்பின் மூலம் 93 ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு என்ற பெயரில் வேலை இழந்துள்ளனர். ரயில்வேயை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.


எனவே மத்திய அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, தேசவிரோத கொள்கைகளை கண்டித்து இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. 


இந்நிலையில், வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. டெல்லி, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 



உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.