சத்தீஸ்கர் மாநிலத்தில் கற்பழிக்கப்பட்ட பெண், போலீசில் புகார் செய்ததால் அவருக்கு ஊர் பஞ்சாயத்து ரூ.5 ஆயிரம் அபராதம்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஸ்பூர் மாவட்டத்துக்குட்பட்ட கிராமத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 4 ஆம் தேதி தனது மூத்த சகோதரர்களுடன் சண்டையிட்டுள்ளார். பின்னர், வீட்டை விட்டு வெளியேறி இரவு நேரத்தில் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கினார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சந்தீப் மற்றும் கிஷோர் ஆகியோருடன் பெண்ணுக்கு அறிமுகம் கிடைத்தது.


அவர்களிடம் இளம்பெண் தனக்கு ஒரு வேலை வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு சந்தீப், கிஷோர் ஆகிய இருவரும் கூலி வேலை இருப்பதாக கூறி ஒரு கட்டுமான தளத்திற்கு அழைத்துச் சென்று கற்பழித்தனர். பின்னர், அந்த பெண்ணிடம் நடந்த சம்பவங்களை வெளியே யாரிடமாவது கூறினால் கடும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டி உள்ளனர். எனினும் அந்த இளம்பெண் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சந்திப், கிஷோர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


இந்தநிலையில் இந்த விவகாரம் ஊர் பஞ்சாயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது கற்பழிப்பு குறித்து போலீசில் புகார் செய்து கிராமத்துக்கு அவமதிப்பை ஏற்படுத்தி விட்டதாக் கூறி பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து பஞ்சாயத்து தீர்ப்பளித்தது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குற்றவாளிகள் இருவரும் தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் பஞ்சாயத்து வலியுறுத்தி உள்ளது. இந்த தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.