கேரளா கன்னியாஸ்திரி பாலியல் வழக்கு தொடர்பாக புத்தமத துறவி தலாய் லாமா கருத்து தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் மறை மாவட்ட பிஷபாக பணியாற்றி வந்தவர் பிராங்கோ முலக்கல். முன்னதாக கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் இவர் பாதரியராக இருந்த போது கன்னியாஸ்திரியை ஒருவரை 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.


இந்த குற்றச்சாட்டினை அடுத்து பிராங்கோ மூலக்கால், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிஷப்பாக இருந்து பதவி விலகினார். எனினும் கன்னியாஸ்திரி கூறும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது, பொய்யானது என மறுத்து வருகிறார். 


கடந்த இருவாரங்களுக்கு முன் காவல்துறையினர் ஜலந்தர் சென்று பிராங்கோவின் வீட்டில் விசாரணை நடத்தினார்கள். இவ்வழக்கினை கோட்டயம் டிஎஸ்பி ஹரிசங்கர், வைக்கம் டிஎஸ்பி கே.சுபாஷ் ஆகியோர் தலைமையில் புலனாய்வுக்குழு விசாரணை செய்து வருகிறது. எனினும் பிஷப்புக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் தாமதம் நிலவுவதாக கேரளாவில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.


இந்த விவகாரம் இந்தியாவில் மட்டுமின்றி வாடிகன் வரை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நெதர்லாந்தில் நடைப்பெற்று வரும் 4 நாள் புத்தமத மாநாட்டில் புத்தமத துறவியான தலாய் லாமா இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் தெரிவித்ததாவது... "கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் பாலியல் பலாத்கார சம்பவத்தில் சிக்கியது போல புத்தமத பெண் ஆசிரியர்களும் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகியுள்ளனர். இதுபோன்ற சம்பவங்களை நான் கடந்த 1990-களில் இருந்தே பார்த்து வருகின்றேன். பாலியல் குற்றம் செய்பவர்கள் புத்தரின் போதனையை பற்றி கவலைப்படுவதில்லை, இது வெட்கக்கேடான விஷயம்" என தெரிவித்துள்ளார்.