மருத்துவர்கள் போராட்டம்: அவசர பிரிவில் கூட நோயாளிகள் சிகிச்சை பெற முடியாத நிலை
இன்று நாடு முழுவதும் 24 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் மருத்துவர்கள். இதனால் நாட்டின் பல பகுதிகளில் மருத்துவ சேவை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது
லக்னோ: மேற்கு வங்கத்தில் ஆரம்பித்த மருத்துவர்களின் போராட்டத்தால், நாடு முழுவதும் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
கடந்த 11-ஆம் தேதி மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முகமது சயீத் என்ற நோயாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். நோயாளி இறந்ததுக்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என்று கூறி, ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், மருத்துவமனையில் பணியாற்றி வந்த 2 பயிற்சி மருத்துவர்களை கொடூரமாக தாக்கினர்.
இதனையடுத்து உறவினர்களின் இந்த தாக்குதலை கண்டித்து பயிற்ச்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பல மருத்துவர்கள் களம் இறங்கினர். இந்த போராட்டம் நாடு முழுவதும் பல பகுதிகளில் எதிரொலித்தது.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு, தங்களது 6 கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என மருத்துவர்கள் அறிவித்து உள்ளனர். இதனையடுத்து, இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என மம்தா தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடப்பட்டது. ஆனால் மருத்துவர்கள் மம்தா பானர்ஜியின் அழைப்பினை ஏற்கவில்லை.
இந்தநிலையில், இன்று நாடு முழுவதும் 24 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் மருத்துவர்கள். இதனால் நாட்டின் பல பகுதிகளில் மருத்துவ சேவை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. பொதுபிரிவு மட்டுமில்லாமல், அவசர பிரிவில் கூட நோயாளிகள் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. அறுவைசிகிச்சை பிரிவு முற்றிலும் மூடப்பட்டிருக்கிறது. இதனால் நோயாளிகள் மட்டுமில்லை, அவர்களின் உறவினர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.