புதுடெல்லி: 2016-17 பொருளாதார சர்வே நிதி அமைச்சர் அருண் ஜேட்லி முன்னால் பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஒவ்வொரு ஆண்டும் பெரும்பாலும் பிப்ரவரி மாதத்தின் கடைசி வாரத்தில் தொடங்கும். மாதத்தின் கடைசி நாளான 28-ம் தேதி அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக இருந்து வந்தது.


பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆங்கிலேயர் காலத்திய இந்த நடைமுறையை மாற்றியமைத்து, தற்போது ஜனவரி மாதத்தின் இறுதியிலேயே பட்ஜெட் கூட்டத்தொடரை தொடங்கி பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடிவு செய்து உள்ளது. அதன்படி பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இது இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், இன்று நடைபெறும் இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்துகிறார்.


இந்த ஆண்டு முதல் முறையாக ரயில்வே பட்ஜெட் ரத்து செய்யப்பட்டு, அது மத்திய பட்ஜெட்டுடன் இணைக் கப்படுகிறது. பட்ஜெட் திட்டங்களை அடுத்த நிதியாண்டின் (2017- 2018) முதல் நாளிலேயே தொடங்குவதற்கு வசதியாக மத்திய அரசு முன்கூட்டி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது.


பல்வேறு பிரச்சினைகளில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இந்த கூட்டத்தொடர் தொடங்குகிறது. எனவே இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் மோடி அரசுக்கு வழக்கம்போல் சவால் மிகுந்ததாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 2 அமர்வுகளாக நடைபெறுகிறது. இதில் முதல் அமர்வு ஜனவரி 31-ம் தேதி முதல் பிப்ரவரி 9-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்பிறகு இரு அவைகளும் ஒத்திவைக்கப்படும்.


பின்னர் மார்ச் மாதம் 9-ம் தேதி 2-வது அமர்வு தொடங்குகிறது. ஏப்ரல் 12-ம் தேதியுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைகிறது.


நிகழ் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இது என்பதால், நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று உரை நிகழ்த்துகிறார்.