அமலாக்கத்துறையின் சம்மனை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அந்நிய முதலீடுக்கான அனுமதி பெற்றுத்தர ரூ.10 லட்சம் முறைகேட்டிற்காக பரிமாற்றம் செய்ததாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு நடைபெற்று வந்த நிலையில், கடந்த 28-ம் தேதி காலை சென்னை விமான நிலையத்தில் அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.


பின்னர் டெல்லி அழைத்து செல்லப்பட்ட கார்த்தி சிதம்பரம் பட்டியால நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை 15 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஆணையிடுமாறு சிபிஐ கோரிக்கை வைத்தது. ஆனால் கார்த்தி சிதம்பரத்தை 1 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.


கார்த்தி சிதம்பரம் 1 நாள் காவல் விசாரணை முடிந்ததை அடுத்து, மறுநாள் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை மேற்கொள்ள மேலும் 14 நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க அவகாசம் வழங்க வேண்டும் என சிபிஐ கோரிக்கை வைத்துள்ளது. மேலும் விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை எனவும் குற்றம்சாற்றியது சிபிஐ. 


இதனையடுத்து, கார்த்திக் சிதம்பரத்தை ஜாமீனில் விடுவிக்க கோரி மனு மீது தாக்கல் செய்யபப்ட்டது. அந்த மனு மீதான ஆணை மார்ச் 7-ல் பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து,  கார்த்தி சிதம்பரத்தை மேலும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


இந்நிலையில், அமலாக்கத்துறை சம்மனை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரம் தொடர்பாக கூடுதல் விசாரணை எதுவும் நடத்தக்கூடாது எனவும்  அவர் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.