டெல்லியில் பொழிந்து வரும் மழை காரணமாக யமுனை ஆறு நிரம்பி வருவதையடுத்து ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்னிந்திய பகுதிகளில் பருவமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், வட இந்தியப் பகுதிகளில் பருவமழை துவங்குவதில் சற்று காலதாமதம் ஏற்பட்டது. ஜூன் 29-அன்று தலைநகரில் பருவமழை துவங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில் ஒருமாதம் கழித்து தற்போது தான் பருவ மழை துவங்கியுள்ளது.


இந்நிலையில் கடந்த 3 நாட்களாக டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.



இதனால், யமுனை கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை டெல்லி மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது.


இதற்கிடையே தொடர்ந்து பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால், வழக்கத்தை விட கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று டெல்லியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால், யாமுனை ஆற்றின் நீர்வரத்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



எனவே யமுனை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரோயோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கி செல்ல வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.