வரும் 5 ஆண்டுகளில், ரூ.15 லட்சம் கோடி மதிப்பு உள்ள நெடுஞ்சாலை திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும், கதர் பொருட்கள் உலகமயமாக்கப்படும் என மத்திய அமைச்சர நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்தியில் மீண்டும் அமைந்துள்ள நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசில், மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை, சிறு, குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சராக நிதின் கட்காரி பொறுப்பேற்றுள்ளார்.
 
இந்நிலையில் தனது இலக்குகள் குறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்., "கட்சி அரசியல், சாதி, இன, வகுப்புவாத அரசியலை தாண்டி, மக்கள் இந்த தீர்ப்பை அளித்துள்ளனர். தங்களுக்கு வளர்ச்சிதான் தேவைப்படுகிறது என்பதை மக்கள் உறுதி படுத்தியுள்ளனர். எங்களுக்கும் அதுதான் முன்னுரிமை பணி ஆகும்.


பணமதிப்பிழப்பு மூலமாக மோடி அரசு, ஊழல் மற்றும் கருப்பு பணத்துக்கு எதிரானது என்ற செய்தி பரப்பப்பட்டது. மோடி அரசின் அனைத்து நலத்திட்டங்களாலும் மக்கள் பலன் பெற்றனர்.


நெடுஞ்சாலை துறைக்கான செயல் திட்டத்தை வகுத்துள்ளோம். அதன்படி, வரும் 5 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலை திட்டங்கள் மேற்கொள்ளப்படும். அவற்றில் 22 பசுமை வழிச்சாலைகளும் அடங்கும்.


20 முதல் 25 நெடுஞ்சாலை திட்டங்கள் முடங்கிக் கிடப்பதாக கண்டுபிடித்துள்ளோம். கிடப்பில் உள்ள திட்டங்களை 100 நாட்களில் முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.


நான் 2014-ஆம் ஆண்டு பொறுப்பு ஏற்றபோது, 403 நெடுஞ்சாலை திட்டங்கள் முடங்கிக் கிடந்தன. அவற்றில் பெரும்பாலானவற்றை முடித்து விட்டதால், வங்கிகளுக்கு ரூ.3 லட்சம் கோடி பணம் மிச்சம் ஆகியுள்ளது. வீழ்ந்து கிடந்த நெடுஞ்சாலை துறையை நிமிர்த்தி உள்ளோம்.


நாள் ஒன்றுக்கு 32 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்கும் பணி நெடுஞ்சாலை பணிகளில் நடந்து வருகிறது. இதை நாள் ஒன்றுக்கு 40 கி.மீ. ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.


முந்தைய 5 ஆண்டுகளில், ரூ.11 லட்சம் கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு ரூபாய் கூட ஊழலுக்கு செல்ல வில்லை.  சுங்கச்சாவடி கட்டணம் மூலம் கிடைக்கும் வருவாய் முழுவதையும் நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளுக்கு பயன்படுத்த பாடுபட்டு வருகிறேன்.


கூட்டு முயற்சியின் மூலம் கதர் பொருட்கள், சிறு, குறு, நடுத்தர தொழில்துறையினரின் உற்பத்தி பொருட்கள் ஆகியவற்றை உலகமயமாக்குவதே எனது இலக்கு. தேன் உற்பத்தியையும் பெரியஅளவில் செய்ய விரும்புகிறோம். முருங்கைக்கு உலக அளவில் கிராக்கி இருப்பதால், அதை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.


தேங்காய் நார் தொழிலை தரம் உயர்த்த விரும்புகிறோம். இந்த தொழில்கள் பெருமளவுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அதிகரிக்கவும் வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார்.