4G சேவையை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி BSNL அதிகாரிகள், ஊழியர்கள் நாடுதழுவிய அளவில் வேலைநிறுத்த போராட்டம்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

4G சேவை உரிமம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி BSNL ஊழியர் சங்கத்தினர் இன்று முதல் 3 நாள் வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.


அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL நிறுவனத்துக்கு 4G சேவை உரிமம் வழங்க வேண்டும், பிஎஸ்என்எல் நிர்வாகத்தின் நிலத்தை அரசு BSNL பெயரிலேயே மாற்றி தர வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை 2 ஆண்டுகளாக வலியுறுத்தியும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை என ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.


எனவே, அந்த கூட்டமைப்பு சார்பில் இன்று முதல் 3 நாட்கள் நடைபெறும் வேலைநிறுத்தத்தில் காஷ்மீர் தவிர நாடு முழுவதும் ஒரு லட்சத்து 76 ஆயிரம் ஊழியர்களும் தமிழகத்தில் 14,000 ஊழியர்களும் முழுமையாக பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது. ராணுவ வீரர்களின் மரணம் காரணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் BSNL ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவில்லை.


மத்திய அரசாங்கம் ரிலையன்ஸ், ஜியோ நிறுவனத்திற்கு ஆதரவான முறையில் செயல்படுதவதால் BSNL நிறுவனத்திற்கு எந்த சலுகையும் கொடுப்பதில்லை என்றும், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மீது மத்திய அரசு அடக்குமுறைகளை ஏவி வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


ஊழியர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பணிகளை மேற்கொள்ளாமல் இருக்கும் பட்சத்தில் BSNL தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.