குஜராத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு மணப்பெண் இன்றி திருமணம் நடத்தப்பட்டுள்ளது. இவரது திருமணத்திற்கு சுமார் 800-க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு சிறப்பிட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் அஜய் பாராட்(வயது 27). கற்றல் குறைபாடு கொண்ட இவருக்கு திருமணம் செய்ய வேண்டும் என விருப்பம். தன்னுடைய ஆசையை தந்தையிடம் தெரிவிக்க மணமகள் கிடைக்காமல் அவதியுற்ற தந்தை விஷ்ணு பாராட்,  உறவினர்களுடன் கலந்து பேசி  மணமகள் இன்றி குஜராத்தியர்களின் விமரிசையான ஆட்டம் பாட்டம்,  ஊர்வலம் , 800 பேருக்கு விருந்து என அமர்க்களப்படுத்தி அஜய் பாராட்டின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றியுள்ளார்.


திருமண நிகழ்வுக்கு முந்தைய நாள், மெஹந்தி மற்றும் சங்கீத நிகழ்ச்சிகள், சுற்றமும் நட்பும் புடைசூழ அமர்க்களமாக நடைபெற்றது. மறுநாள் அஜய் பாராட், பிங்க் நிற தலைப்பாகை அணிந்து, தங்க நிறத்தில் ஷெர்வாணியும், சிவப்பு மற்றும் வெள்ளை நிற ரோஜா மாலை அணிந்தும் மாப்பிள்ளை கோலத்தில் குதிரையின் மீது ஏறி திருமண ஊர்வலம் சென்று உள்ளூர் மக்களின் மனதை கவர்ந்துள்ளார்.


கிட்டத்தட்ட 200 விருந்தினர்கள் அந்நிகழ்வில் கலந்து கொண்டு குஜராத்தி இசைக்கேற்ப நடனம் ஆடி வந்தனர். அஜய் பாராட்டின் தந்தை விஷ்ணு பாராட் இத்திருமணம் குறித்து பேட்டியளிக்கும் போது கூறுகையில்., "என் மகனுக்கு கற்றல் குறைபாடு இருந்தது அவனுடைய மிக இளம் வயதில் தெரிய வந்தது. அவனுடைய தாயையும் அவன் அச்சிறிய வயதிலேயே இழந்து விட்டான். உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திருமணங்களுக்கு செல்லும் போதெல்லாம் அஜய் பாராட் எனக்கு எப்போது கல்யாணம் என்று என்னிடம் கேட்டுக் கொண்டிருப்பான். 


அவனுடைய கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவிப்பேன். என் தயக்கத்தையும் மீறி அவனுக்கு பெண் தேடியிருக்கிறேன். ஆனால் அவனது பிரச்சினையால் யாரும் பெண் தர முன்வரவில்லை. 


எனினும் அவனுடைய ஆசையை எப்படியாவது நிறைவேற்றி விட வேண்டும் என்று முடிவு செய்தேன். என்னுடைய உறவினர்களிடம் இது குறித்து பேசினேன். அவர்கள் ஒப்புக்கொண்டதும் என் மகனுடைய கனவை நிறைவேற்றும் முயற்சியில் இறங்கினேன்.  தற்போது என் மகன் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்" என மனம் நெகிழ்ந்தார்.