புது டெல்லி: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டின் (National Conference) தலைவருமான ஃபாரூக் அப்துல்லா (Farooq Abdullah) இன்று (வெள்ளிக்கிழமை) தனது குப்கர் இல்லத்திலிருந்து வெளியேறினார். மத்திய அரசு 370 வது பிரிவை ரத்து செய்ததைத் தொடர்ந்து அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட ஏழு மாதங்களுக்குப் பிறகு வெளியே வந்த அவர், "நான் சுதந்திரமாக இருக்கிறேன், நான் சுதந்திரமாக இருக்கிறேன்" (I am free, I am free) என்று அவர் தனது வீட்டிற்கு வெளியே கூடியிருந்த ஊடகவியலாளர்களிடம் கூறினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370 (Article 370) ரத்து செய்து, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக (Union Territories) பிரித்தது. அதன் பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அப்துல்லா கைது செய்யப்பட்டார்.


செய்தியாளர்களிடம் பேசிய ஃபாரூக் அப்துல்லா, "எனது சுதந்திரத்திற்காக பேசிய மாநில மற்றும் நாட்டு மக்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். எனது சுதந்திரத்திற்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும், ஒவ்வொரு நபருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன்" என்று 82 வயதான அப்துல்லா (Abdullah) கூறினார்.


"முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முப்தி (Mehbooba Mufti) மற்றும் உமர் அப்துல்லா (Omar Abdullah) உட்பட தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள மற்ற அனைத்து தலைவர்களும் விடுவிக்கப்பட்டால் மட்டுமே இந்த சுதந்திரம் முழுமையடையும்" என்று அவர் மேலும் கூறினார். 


அனைவரையும் விடுவிக்க இந்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன் என்றும் தெரிவித்தார். அனைத்து தலைவர்களும் விடுவிக்கப்படும் வரை எந்த அரசியல் அறிக்கையும் வெளியிட மாட்டேன் என்றும் அப்துல்லா கூறினார்.


ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் வெள்ளிக்கிழமை அவருக்கு எதிராக போடப்பட்ட கடுமையான பொது பாதுகாப்பு சட்டத்தை (Public Safety Act - PSA) ரத்து செய்ததை அடுத்து, என்.சி தலைவர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.