ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில், ஹிஸ்புல் முஜாகீதின் இயக்க தளபதி பர்ஹான் முசாபர் வானி உட்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பர்ஹான் வானி கொல்லப்பட்டதற்கு எதிராக பிரிவினைவாதிகள் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து இருந்தனர். இதனால், ஸ்ரீநகரில் ஊரடங்கு உத்தரவுக்கு இணையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மொபைல் இண்டர்நெட் சேவையும் தற்காலிகமாக முடக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு பதட்டமான சூழல் நிலவி வந்த நிலையில், அங்குள்ள டிரால் நகரில் வானியின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றது. 


இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதால் பெரும் பரபரப்பு நிலவியது. பாதுகாப்பு படையினரின் கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி மாற்று வழியில் வந்து பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தினரிடையே பேசுவதற்காக சில பிரிவினைவாதிகள் வர முயற்சித்தனர். ஆனால், பலத்த பாதுகாப்பை மீறி பிரிவினைவாதிகளால் அங்கு செல்ல முடியவில்லை.