கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வருகின்றனர் அம்மாநில முதல்வர் மற்றும் எதிர்கட்சி தலைவர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கனமழை காரணமாக கேரளாவின் 22 அணைகள் நிரம்பி வழிகின்றன. முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அனைத்து அணைகளையும் ஒரே நேரத்தில் திறக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் பெரியாறு, வைக்கம், பம்பை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.


ஆகஸ்ட் 8 முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் வடக்கு மற்றும் கிழக்கு கேரளா பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. நேற்றைய நிலவரப்படி இதுவரை 29 பேர் பலியாகியுள்ளனர். அதில் 25 பேர் நிலச்சரிவில் சிக்கியும், 4 பேர் வெள்ளத்தில் மூழ்கியும் உயிரிழந்துள்ளனர். கேரளாவை பொருத்த வரை இதுவரை 439 நிவாரண முகாம்களில் 53,501 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இடுக்கி மாவட்டம் மற்றும் மலைப்பாங்கான இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. கோழிக்கோடு மற்றும் வயநாடு பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்றுவதற்காக இராணுவம் சிறிய பாலங்களைக் கட்டி வருகின்றன.


வெள்ள அபாயம் மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள இராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை மற்றும் என்.டி.ஆர்.எஃப் ஆகியவை ஈடுபட்டுள்ளன என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்திருந்தார்.


 



இந்நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடுக்கி, வயநாடு, எர்ணாகுளம் உட்பட பகுதிகளில் பார்வையிட இன்று பயணம் மேற்க்கொண்டார். ஆனால் இடுக்கியில் வானிலை மிகவும் மோசமாக இருந்ததால், அவர் வந்த ஹெலிகாப்டர் தரையிறங்க முடியவில்லை. இதனால் அங்கு பார்வையிட முடியவில்லை.


 



இதனையடுத்து அவர் தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதிகளை பார்வையிட்டு வருகிறார். மீட்பு பணிகளை குறித்து ஆராய்ந்து கேட்டறிந்தார். அதன் பின்னர் எர்ணாகுளம் செல்ல இருப்பதாக தெரிகிறது. இவருடன் கேரளாவின் எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னத்தலா பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வருகிறார்.