வரும் 19-ஆம் தேதி முதல் கேரளாவில் பருவமழை மீண்டும் தீவிரமடையும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவில் வழக்கமாக ஜூன் முதல் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த வருடம் ஒரு வாரம் தாமதமாக 8-ஆம் தேதி தொடங்கியது. 


திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் தான் அதிகளவு மழை பெய்தது. கோழிக்கேடு, கண்ணூர் உள்பட வடமாவட்டங்களில் பருவமழை தொடங்கவில்லை. 


இந்நிலையில் தொடங்கிய ஒருசில நாட்களிலேயே பருவமழையின் தீவிரம் குறைந்தது. முதல் 10 நாட்களில் வழக்கமாக பெய்ய வேண்டிய மழையில் 30% குறைந்தது. கடந்த இரு தினங்களாக கேரளாவில் பரவலாக எங்கும் மழை பெய்யவில்லை. இதற்கிடையே வரும் 19-ஆம் தேதி முதல் பருமழை மேலும் தீவிரமடையும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.


அண்டை மாநிலமான கேரளாவில் பருவ மழை தீவிரம் அடையும் என தகவல்கள் வெளியாகி வரும் அதேவேளயில் தமிழகத்தில் பருவ மழை பொய்த்து வறட்சி நிலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் கடும் வறட்சியால் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.


தமிழகத்தில் பருவமழை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பல இடங்களில் பருவம் தவறிய மழை பெய்து வருகிறது. தொடர் மழை இல்லாத காரணத்தினால் கிடைக்கும் மழைநீர் முழுவதும் கடலுக்கு சென்று கலந்து விடுகிறது. மழை, வெள்ளநீரை சேமித்து வைக்க அரசும் தடுப்பணைகளை கட்டாத நிலையில் அவ்வளவு தண்ணீரும் கடலுக்கே சென்று சேருகிறது. 


இதனால் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது குறைந்து விட்டது. எனவே, விவசாயிகள் பலர், அதிகளவு நிலத்தடி நீரை பயன்படுத்தி நடவு செய்து வருகின்றனர். தற்போது கோடை முடிவுறும் தருவாயில் உள்ள நிலையில் மழையே பெய்யாததால் நிலத்தடிநீர் அதலபாதாளத்திற்கு சென்று தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.